``காங்கிரஸ் ஒரு 'துரோகக் கட்சி' கூட்டணிக் கட்சிகளை முதுகில் குத்துகிறது!" - பிரதமர் மோடி தாக்கு!
Vikatan May 10, 2026 05:48 PM

காங்கிரஸ் கட்சி தனது அரசியல் லாபத்திற்காகக் கூட்டணிக் கட்சிகளுக்குத் துரோகம் இழைப்பதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளது என்றும், மாநிலக் கட்சிகளின் தயவில் மட்டுமே அக்கட்சி உயிர் பிழைத்து வருகிறது என்றும் பிரதமர் மோடி கடுமையாகச் சாடியுள்ளார்.

பெங்களூருவில் உள்ள ‘வாழும் கலை’ (Art of Living) அமைப்பின் 45-வது ஆண்டு விழா மற்றும் புதிய தியான மந்திர் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற பிரதமர், பின்னர் பாஜக தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், ``காங்கிரஸ் மற்றும் தி.மு.க இடையே சுமார் 30 ஆண்டுக்கால நெருங்கிய உறவு இருந்தது. 2014-க்கு முன்பாக மத்தியில் 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நீடித்ததற்கு தி.மு.க-வே முதுகெலும்பாக இருந்தது.

விஜய் - ராகுல் காந்தி

ஆனால், அரசியல் சூழல் மாறியவுடன், தங்களுக்கு இக்கட்டான நேரங்களில் உதவிய அதே தி.மு.க-வை காங்கிரஸ் கைவிட்டது. அதிகாரப் பசியால் காங்கிரஸ் முதுகில் குத்திவிட்டது. தற்போது தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மீண்டும் ஒரு கட்சியின் தோள் மீது ஏறி சவாரி செய்ய காங்கிரஸ் முயற்சிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக கர்நாடக காங்கிரஸ் அரசு மக்களின் நலனைவிட, உட்கட்சிப் பூசல்களைத் தீர்ப்பதற்கே அதிக நேரத்தைச் செலவிட்டு வருகிறது.

முதலமைச்சர் பதவியில் யார் நீடிப்பது, யாருக்கு அடுத்த வாய்ப்பு என்பதில் நிலவும் குழப்பத்தால் நிர்வாகம் முடங்கியுள்ளது. இவர்களது ‘கேரண்டி’ திட்டங்கள் அனைத்தும் போலியானவை. புதுச்சேரி, மேற்கு வங்கம், அசாம் போன்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மக்களின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. ஊழல்கள் அற்ற வேகமான வளர்ச்சியை மக்கள் விரும்புகிறார்கள். இதற்கு பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே நிலையான மாற்றாக உள்ளது." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Vijay : "மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து.!" - முதல்வர் விஜய்க்கு வாழ்த்து சொன்ன பிரதமர் மோடி
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.