மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தைச் சேர்ந்த பாமக மாநில செயற்குழு உறுப்பினர் கணேசன் சமீபத்தில் காலமானார். அவரது மறைவையொட்டி, பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இன்று குத்தாலத்திலுள்ள கணேசனின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் உயிரிழந்த கணேசனின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது: "தற்போது மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இல்லை. இதனால் வழக்கமாக குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி அணை திறக்கப்படுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி, கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தால் மட்டுமே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கும். அதன் பிறகே சாகுபடிக்குத் தேவையான தண்ணீரைப் பெற முடியும் என்ற இக்கட்டான சூழல் நிலவுகிறது."
டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், "டெல்டா பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.60 வரை லஞ்சம் வாங்குகிறார்கள். ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.275 வரை ஊழல் நடக்கிறது. விவசாயிகளிடம் இத்தகைய பகல் கொள்ளையை அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். நெல் கொள்முதலில் நடக்கும் ஊழலைத் தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு ஒரு டன் நெல்லுக்கு ரூ.3,500 வழங்க வேண்டும்" என வலியுறுத்தினார்.
தமிழகத்தின் நெல் உற்பத்தி மற்றும் சேமிப்புத் திறன் குறித்து அவர் பேசுகையில்; தமிழகத்தில் ஆண்டுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. அதில் அரசு 40 லட்சம் டன் மட்டுமே கொள்முதல் செய்கிறது. ஆனால், இங்கு வெறும் 18 லட்சம் டன் நெல் சேமிப்பதற்கான கிடங்குகள் மட்டுமே உள்ளன. இதனால் லட்சக்கணக்கான டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டும், சரியான சேமிப்பு வசதி இல்லாமல் மழையில் நனைந்து வீணாகிக் கொண்டிருக்கிறது. நெல் சேதமடைந்து மீண்டும் உணவிற்காக வெளிமாநிலங்களில் கையேந்தும் நிலை ஏற்படக்கூடாது. எனவே, டெல்டா பகுதிகளில் கூடுதலாக 20 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகளை உடனடியாக அமைக்க வேண்டும்.
கல்வி மற்றும் சுகாதாரக் கொள்கை குறித்துப் பேசிய அன்புமணி, "தமிழகத்தில் மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்னும் அரசு மருத்துவக்கல்லூரிகள் இல்லை. இது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த 6 மாவட்டங்களிலும் உடனடியாக மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்பட வேண்டும். அதேபோல், நிர்வாக வசதிக்காகக் கும்பகோணத்தைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்" என்றார்.
திமுக அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், முன்னாள் "முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது திமுக ஆட்சியில் மக்களுக்குக் கோபமில்லை என்று கூறினார். இது உண்மை நிலவரம் அவருக்குத் தெரியாமல் இருக்கலாம். கீழ்மட்டத்திலுள்ள கட்சியினர் உண்மை நிலையை முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினிடம் கொண்டு செல்லவில்லை. திமுக ஆட்சியில் எதுவும் ஆக்கபூர்வமான நடைபெறவில்லை விளம்பர ஆட்சிதான் நடைபெற்றது. தற்போது ஸ்டாலின் தோல்வியுற்ற விரக்தியில் ஏதேதோ பேசுகிறார், அவர் மக்கள் தீர்ப்பை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்" என்றார். மேலும், தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகளை மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார்.
தமிழகத்தின் நிதி நிலை குறித்து அவர் கூறுகையில்: கடந்த அதிமுக ஆட்சியில் 2021-ல் நேரடி நிர்வாக கடன் ரூ.4 லட்சத்து 56 ஆயிரம் கோடியாக இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கூடுதலாக ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளனர். இதில் வெறும் ரூ.1.5 லட்சம் கோடி மட்டுமே மூலதனச் செலவுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.3.5 லட்சம் கோடி முந்தைய கடன்களுக்கு வட்டி கட்டுவதற்கே செலவிடப்பட்டுள்ளது. கடன் வாங்கினால் வளர்ச்சி மற்றும் கட்டுமானங்கள் இருக்க வேண்டும். தற்போதுள்ள நிதி நெருக்கடியைச் சரிசெய்ய மத்திய அரசு தமிழகத்திற்கு உதவ வேண்டும்.
ஈரான் போர் காரணமாக உலகம் முழுவதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை குறைவுதான் என்றாலும், அதன் விலை உயர்வை மக்கள் மீது சுமத்தக் கூடாது என்றார். மேலும், பிரதமர் மோடி கூறியபடி 3 மாதத்திற்குத் தேவையான கச்சா எண்ணெய் இருப்பு உள்ளதால், சில மாதங்களில் இப்பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.
"பாமக எப்போதும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படும். நல்ல விஷயங்களைச் செய்தால் பாராட்டுவோம், மக்கள் நலனுக்கு எதிராகத் தவறுகள் நடந்தால் பாமக வீதியில் இறங்கிப் போராடும்" என்று கூறினார்.