PM Modi: "வெளியே போறீங்களா? அப்போ இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்க" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அட்வைஸ்!
ஜேம்ஸ் May 31, 2026 10:14 PM

நாடு முழுவதும் வெயில் சதமடித்து வரும் நிலையில், பொதுமக்கள் வெளியே வரும் போது தங்களை எப்போதும் பாதுக்காப்பாக  வைத்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமரின் மாதாந்திர வானொலி நிகழ்ச்சியான 'மன் கி பாத் இன்றுஒளிபரப்பானது. அதில் கோடைகால வெப்பம் மற்றும் மாம்பழங்களின் சிறப்புகள் குறித்து பிரதமர் மோடி பேசினார்.

வெயிலில் செல்லும்போது கவனம் தேவை!

"நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் உக்கிரமாக இருக்கும் இந்த சமயத்தில், மக்கள் தங்களை கூடுதல் கவனத்துடன் பார்த்துக்கொள்வது மிகவும் அவசியமாகும். உடம்பில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அத்தியாவசியத் தேவைகளுக்காக வெயிலில் வெளியே செல்லும்போது, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு கவனமாகச் செல்லுங்கள்.

தொடர்ந்து தண்ணீர் குடியுங்கள். இது தொடர்பாக பல்வேறு அரசுத் துறைகள் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளையும், அறிவுறுத்தல்களையும் பின்பற்றி நடங்கள்" என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே கடந்த புதன்கிழமையும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு இதே போன்றதொரு கோரிக்கையை விடுத்திருந்தார். கடுமையான கோடை வெயில் நிலவி வருவதால், பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்தச் சூழலில் உடலை நீரேற்றத்துடன் வைத்திருப்பதே மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

முக்கனிகளில் முதல் கனி: மாம்பழங்களின் பெருமை!

வெப்ப அலையைப் பற்றிப் பேசிய பிரதமர், கோடைகாலத்தில் அனைவரது வீடுகளிலும் பேசப்படும் 'முக்கனிகளின் அரசனான' மாம்பழங்கள் குறித்தும் சுவாரசியமாகப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவின் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு தனித்துவமான மாம்பழ வகையும், அதன் நறுமணமும் உள்ளதாக குறிப்பிட்ட அவர் மகாராஷ்டிராவின் ஹாபுஸ் (அல்போன்சா) மற்றும் குஜராத்தின் கேசர் ஆகிய மாம்பழங்கள் 'ஆம்ரஸ்' (Aamras) செய்ய உயிர்நாடியாக விளங்குகின்றன.

இதையும் படிங்க: EPS: என்ன செய்யப்போகிறார் எடப்பாடி பழனிசாமி? அடுத்தடுத்து காத்திருக்கும் சவால்!

மேலும் உத்தரபிரதேசத்தின் தசேரி மற்றும் காசியின் லங்டா மாம்பழங்கள் தனிச்சிறப்பு மிக்கவை. அதே போல் பீகாரின் சௌசா மற்றும் மால்தா மாம்பழங்களின் நறுமணம் தூரத்திலிருந்தே ஆளை இழுக்கும்."தென்னிந்தியாவிற்குச் சென்றால் அங்கே பங்கனப்பள்ளி, தோட்டாபுரி, நீலம், மல்கோவா போன்ற ரகங்களைக் காணலாம். அதேபோல் மேற்கு வங்கத்தில் ஹிம்சாகர், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சுவர்ணரேகா போன்ற பல வகைகள் உள்ளன" என்று பிரதமர் மோடி பட்டியலிட்டார்.

மேலும், "இடம் மாறும்போது மாம்பழத்தின் வடிவம், நிறம் மற்றும் சுவையும் மாறுகிறது. இந்தியாவின் கிராமங்களில் விளையும் இந்த மாம்பழங்களின் பயணம், தற்போது உலகளாவிய சந்தையைச் சென்றடைந்து கொண்டிருக்கிறது" என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.