CM Vijay: திருச்சியில் இன்று நடைபெறும் முதலமைச்சர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சியில், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின் பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சியாக, திருச்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் பெரம்பூர் மட்டுமின்றி திருச்சி கிழக்கிலும் போட்டியிட்டார். இரண்டிலுமே அமோகமான வாக்குகளை பெற்று வெற்றி வாகை சூடினார். ஆனால், ஏதேனும் ஒரு தொகுதியின் பிரதிநிதித்துவத்தை மட்டுமே தக்கவைத்துக் கொள்ள முடியும் என்பதால், திருச்சி கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் முதலமைச்சரான பின் தொடர்ந்து தலைமை செயலகத்திலேயே பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் முதன்முறையாக இன்று மக்கள் சந்திப்பில் ஈடுபட உள்ளார். அப்போது தன்னை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க உள்ளார்.
திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் மாலை 4.15 மணிக்கு, இந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி தொடங்க உள்ளது. இதில் QR கோட் குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு அளிக்கப்பட்டுள்ள 5000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக விமான நிலையத்திலிருந்து விழா நடைபெற உள்ள பகுதி வரையில் முதலமைச்சர் ரோட் ஷோவில் ஈடுபடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக போக்குவரத்திலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளனவாம். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை தவிக்க காவல்துறையினர் வலியுறுத்தியுள்ள மாற்று வழிகளை பின்பற்றும்படி பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மாவட்ட வாரியான தனது தேர்தல் பரப்புரையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 13ம் தேதி,திருச்சியில் தான தவெக தலைவராக விஜய் தொடங்கினார். அதே மாவட்டத்தைச் சேர்ந்த தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று முதலமைச்சராகவும் உருவெடுத்துள்ளார். அதை தொடர்ந்து திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தாலும், தமிழ்நாட்டின் உயர்பதவியில் அமர்ந்து பிறகு விஜய் பங்கேற்கும் முதல் நிகழ்ச்சியும் திருச்சியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை தனது அரசியல் பயணத்திற்கு வழிவகுத்த மாவட்டத்திற்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக விஜய் முன்னெடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த 10ம் தேதி முதலமைச்சராக பொறுப்பேற்ற உடனேயே விஜய் மக்களிடன் உரையாற்றினார். தொடர்ந்து 200 யூனிட் வரை விலையில்லா மின்சாரம், சிங்கப்பெண் அதிரடிப்படை போன்ற மூன்று முக்கிய திட்டங்களுக்கு முதல் நாளிலேயே கையொப்பமிடுவதாக அறிவித்தார். அதன் பிறகு எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் துறை ரீதியான ஆய்வுக் கூட்டங்களில் கவனம் செலுத்தி வந்தார். இடையே, விவசாய கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பையும் வெளியிட்டார். இந்நிலையில் முதலமைச்சராக பங்கேற்கும் முதல் பொதுநிகழ்ச்சியில், தனது தேர்தல் பரப்புரையின் போது அறிவித்த பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளில் ஏதேனும் ஒருசிலவற்றை நடைமுறைபடுத்துவதற்கான அறிவிப்பு இடம்பெறுமா? என தமிழ்நாட்டு மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதுபோக கடந்த 22 நாட்களில் தமிழ்நாட்டில் நடந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகள் மற்றும் அதுதொடர்பான கேள்விகளுக்கும், இந்த நிக்ழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.