Annamalai BJP: ஆப்ரேஷன் ”கிறிஸ்துவ மிஷினரி” என்ற பெயரில் விஜய்க்கு எதிராக அண்ணாமலையை தனிக்கட்சி தொடங்க வைக்க பாஜக பரிசீலித்து வருகிறதாம்.
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தேர்தல் முடிந்த பிறகும் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார். மெல்ல மெல்ல அவர் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்படுவதாகவும், இதன் காரணமாக தனிக்கட்சி தொடங்க அண்ணாமலை பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தான் அவர் இன்று டெல்லி செல்ல உள்ளதாகவும், பாஜக தலைவர்களை சந்தித்து முக்கிய ஆலோசனைகளை நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது,. இதனிடையே அண்ணாமலை ஒதுக்கப்படுவதை போன்று பிம்பத்தை வேண்டுமென்று உருவாக்கப்படுவதாகவும், தமிழ்நாட்டில் ஆப்ரேஷன் ”கிறிஸ்துவ மிஷினரி” என்ற பெயரில் விஜய் Vs அண்ணாமலை என்ற அரசியல் சூழலை ஏற்படுத்த பாஜக முயல்கிறதாம். பல்வேறு தீவிர முயற்சிகளுக்குப் பிறகும் எதிர்பார்த்த வளர்ச்சி மற்றும் வெற்றியை ஈட்டமுடியாததால், நேரடியாக இல்லாமல் மறைமுகமாக தனது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக திராவிட கட்சிகள் வீழ்த்தப்பட்டு, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் இளம் தலைமுறையினர் மிகமுக்கிய பங்கு வகித்துள்ளனர் என்பதை பாஜகவும் உணர்ந்துள்ளது. அவர்களிடையே பாஜக வாக்கு வங்கியை விரிவுபடுத்துவது என்பது அவ்வளவு எளிதல்ல, அதேநேரம் அண்ணாமலை தனிப்பட்ட முறையில் இளைஞர்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றுள்ளார். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் வகையிலேயே அண்ணாமலையை ஓரங்கட்டுவதை போன்று வெளிக்காட்டி, அவரை தனிக்கட்சி தொடங்க பாஜக உந்துகிறதாம்.
தேசியமும், தெய்விக்கமும் தனது இரண்டு கண்கள் என கூறிய முத்துராமலிங்க தேவர் போன்றோரை அடிப்படையாக கொண்டு அண்ணாமலை புதிய கட்சி ஒன்றை தொடங்க உள்ளாராம். அதன் மூலம் மதவாதத்தை கைவிட்டுவிட்டு தேசியம் என்பதை முதல் குறிக்கோளாக கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றனவாம். இதன் மூலம் கட்சியின் நடவடிக்கைகள் மறைமுகமாக தமிழ் தேசியத்திற்கு எதிராகவும் இருக்கும், அதேநேரம், தேசியவாதம் மற்றும் ஆன்மீகத்தை கலவையாக முன்னெடுத்து இளைஞர்களை தங்கள் பக்கம் ஈர்க்க முடியும் என அண்ணாமலை நம்புகிறாராம்.
சாதி மற்றும் மதம் என பாகுபாடு என நிலவி வந்த தமிழ்நாடு அரசியலை, கிறிஸ்துவ மிஷினரி என்ற பிரச்னையை நோக்கி நகர்த்தவும் பாஜக திட்டமிட்டுள்ளதாம். அதாவது மதத்தை கைவிட்டு மிஷினரி அமைப்புகளை குறித்து அரசியல் முன்னெடுக்கப்படுமாம். மிஷினரிகளின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அரசுக்கு குறிப்பிட்ட அமைப்புகளிலிருந்து எல்லாம் பணம் வருகிறது. திரைக்கவர்ச்சி என்ற பெயரில் மிஷினரி மாஃபியா தான் தமிழ்நாட்டை கைப்பற்றியுள்ளது என பேசி, தமிழர்கள் அனைவரும் ஒன்று திரள வேண்டும் என சூளுரைப்பார்கள்.
இந்தியத்திற்கான அரசியலுக்காக தமிழர்கள் என்ற வார்த்தை மட்டும் பயன்படுத்தப்படும் என அரசியல் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இதன் மூலம் பாஜகவிற்கான எதிரியாக அண்ணாமலையை முன்னிறுத்தி, அதன் வாயிலாக தமிழ்நாட்டில் விஜய் Vs அண்ணாமலை எனும் நிலையை உருவாக்க டெல்லி விரும்புகிறது எனவும் கமலாலயம் மற்றும் பனையூர் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.