இளைஞர்களை குரூப் 1 தேர்வு அறிவிப்பு ஏமாற்றி உள்ளதாகவும் காலியிடங்கள் எண்ணிக்கையை குறைந்தது 100 ஆக உயர்த்த வேண்டும் எனவும் பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
’’தமிழக அரசுத் துறைகளுக்கு துணை ஆட்சியர் உள்ளிட்ட குரூப் 1 பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கையை டி.என்.பி.எஸ்.சி எனப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கும் நிலையில், அதை ஆவலுடன் எதிர்பார்த்திருந்த தேர்வர்கள் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர். சுமார் 2 லட்சம் இளைஞர்கள் எழுதக்கூடிய இந்த தேர்வுகளுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அண்மைக் காலங்களில் இல்லாத அளவுக்கு வெறும் 26 ஆக குறைக்கப்பட்டிருப்பதுதான் இந்த அதிர்ச்சிக்கு காரணமாகும்.
தமிழ்நாட்டில் துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், வணிகவரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், பதிவுத்துறை மாவட்ட பதிவாளர், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தீயவிப்பு அலுவலர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பணிகளுக்கான குரூப் 1 தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது.
நடப்பாண்டிற்காக குரூப் 1 பணிகளுக்கான அறிவிக்கையை தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. அரசுத்துறைகளில் காலி பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், குறைந்தது 100 பணியிடங்களுக்காவது ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 12 துணை ஆட்சியர்கள், 8 மாவட்ட பதிவாளர்கள், 3 கூட்டுறவு துணை பதிவாளர்கள், இரு வணிகவரி உதவி ஆணையர்கள், ஒரு தொழிலாளர் நல உதவி ஆணையர் என 26 இடங்களுக்கு மட்டுமே அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை இது எந்த வகையிலும் திருப்திப்படுத்தாது.
தமிழக அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை கடந்த பல பத்தாண்டுகளாகவே ஆட்சியாளர்கள் வெளியிடாமல் மர்மமாகவே வைத்துள்ளனர். அரசுத்துறைகளில் ஆறரை லட்சம் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அரசு ஊழியர் அமைப்புகள் கூறுகின்றன. குறைந்தது 5 லட்சம் பணியிடங்களாவது காலியாக இருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.
மொத்தக் காலியிடங்களில் குரூப் 1 பணிகளின் எண்ணிக்கை 0.10% என்று வைத்துக் கொண்டால் கூட குறைந்தது 500 பணியிடங்கள் காலியாக இருக்க வேண்டும். ஆனால், வெறும் 26 பணியிடங்களுக்கு மட்டுமே ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்படுகிறது என்றால், காலியிடங்களை நிரப்பவும், இளைஞர்களுக்கு வேலை வழங்கவும் தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தோன்றுகிறது.
குரூப் 1 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த பத்தாண்டுகளில் 6 முறை போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தியுள்ளது. 09.11.2026ஆம் நாளிட்ட அறிவிக்கை மூலம் 85 பேரும், 01.01.2019 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 139 பேரும், 20.01.2020 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 69 பேரும், 21.07.2022 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 92 பேரும், 28.03.2024 தேதியிட்ட அறிவிக்கை மூலம் 90 பேரும், 01.04.2025ஆம் தேதியிட்ட அறிவிக்கை மூலம் 70 பேரும் குரூப் 1பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவற்றில் எந்த ஆண்டிலும் இவ்வளவு குறைவாக ஆள்கள் தேர்வு செய்யப்படவில்லை.
அடுத்தடுத்து ஆள்தேர்வு அறிவிக்கை வெளியிடப்பட்ட ஆண்டுகளில் கூட, 2020ஆம் ஆண்டில் 69 பேரும், 2025ஆம் ஆண்டில் 70 பேரும் குரூப் 1 பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் 545 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆண்டுக்கு சராசரியாக 55 பேர் தேர்வாகியுள்ளனர். அவ்வாறு இருக்கும் போது நடப்பாண்டில் மட்டும் ஆண்டு சராசரியில் பாதிக்கும் குறைவாகவும், முந்தைய ஆண்டுகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கும் மட்டுமே முதல் தொகுதி பணியிடங்களை நிரப்புவது நியாயமல்ல.
இந்த இரு காரணங்களையும் கடந்து புதிய ஆட்சியின் மீது இளைஞர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டியதும் கட்டாயம். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கும் குரூப் 1 பணிகளுக்கான ஆள்தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கையை இப்போதுள்ள 26லிருந்து குறைந்தது 100 ஆக அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.