Seeman: ஈழப்போரின் போது இலங்கையிலிருந்து பிரபாகரன் தன்னை தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு பேசியதாக, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நடிகரும், பாஜக பிரமுகருமான சரத்குமரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம், திருநெல்வேலியில் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய சீமான், “கடந்த 2008ம் ஆண்டு பிப்ரவரி மாதம் எனது அண்ணன் பிரபாகரனின் அழைப்பை ஏற்றி இலங்கைக்குச் சென்று நாடு திரும்பியிருந்தேன். இந்த நேரத்தில் அங்கு போர் சூழல் மிகவும் கடினமானதாக இருந்தது. அதேநேரம், திரையுலகினர் சேர்ந்து காவிரி நதிநீர் தொடர்பாக ஒரு போராட்டத்தை நடத்தினோம். அந்த போராட்டத்தில் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயகாந்த் உள்ளிட்ட பலரும் பங்கேற்று பேசினார்கள்.
அந்த போராட்டத்தில் நானும் பேசினேன். இந்த நிகழ்ச்சியின் நேரலையை எனது அண்ணன் பிரபாகரன் தொலைக்காட்சியில் பார்த்துள்ளார். அரசியல் பிரிவு செயலாளரான நடேசன் மூலமாக என்னை தொடர்பு கொண்டார். அப்போது, “காவிரி நீர் போராட்டம் போலவே, போர் நிறுத்தத்தை வலியுறுத்தி திரைத்துறை சார்ந்து ஒரு போராட்டத்தை செய்ய முடியாதா? என்று உங்களது அண்ணன் கோரினார். இதற்கு நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் நடேசன் தெரிவித்தார். அப்போது உடனடியாக எனக்கு நியாபகம் வந்தது சரத்குமார் தான். நடிகர் சங்கத்தில் பொறுப்பில் இருந்தார். இப்போது நான் ஒரு நன்கு அறியப்பட்ட மகனாக இருக்கிறேன். ஆனால், அந்த காலகட்டத்தில் நான் ஒரு சராசரி இயக்குனர் தான். அப்போது எனது அண்ணன் சரத்குமார் தியாகராய நகரில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் படப்பிடிப்பில் இருந்தார்.
பார்க்க சென்றபோது சீமான் வந்து இருக்கிறார் என உதவியாளர்கள் சொல்லவே, உள்ளே வரும்படி அழைத்தார். அங்கு பேசிக்கொண்டிருந்தபோது என்ன விஷயம் என கேட்க, சூழலை எடுத்துச் சொன்ன்னேன். காவிரி நதி நீருக்கு செய்ததை போல போர் நிறுத்தத்திற்கும் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தேன். உடனே ராதாரவியை தொலைபேசியை மூலம் தொடர்புகொண்டார். நான் கோரிக்கைகளாக முன்வைத்ததை சரத்குமார் எடுத்துரைத்தார். உடனே அதை தாராளமாக செய்துவிடலாம் என ராதாரவி கூறினார். ஈழத்து படுகொலையை நிறுத்த சொல்லி கையெழுத்து போடாமல் போன தலைவர்கள் மற்றும் நடிகர்கள் மத்தியில் அவர் ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
18 ஆண்டுகள் ஆகிவிட்டதால் சரத்குமார் மறந்து இருக்கலாம். ஆனாலும் அவர் உடனடியாக சம்மதம் தெரிவித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ராமேஷ்வரத்தில் போராட்டத்தை நடத்தலாம் என கூறவே, உரிய பாதுகாப்பு வழங்க முடியாது என கூறப்படுகிறது. இதனால் போராட்டம் இரண்டாக பிரிவது தொடர்பாக எனக்கு அழைப்பு வருகிறது. ஒரே நோக்கத்திற்காக இரண்டு நாட்களில் இரண்டு இடங்களில் போராட்டம் நடைபெறுவது நமக்கு வலுசேர்க்கும் அதைபற்றி கவலைகொள்ள வேண்டாம் என கூறினேன். இதையடுத்து ராமேஷ்வரத்தில் பாரதிராஜா தலைமையிலும், சென்னையில் சரத்குமார் தலைமயில் ஒரு போராட்டம் நடைபெற்றது. ராமேஷ்வரம் கூட்டத்தில் நான் பேசி சிறையிலடைபட்டேன். இதனால் நான் சொல்ல வருவது என்னவென்றால் சரத்குமார் வெறும் நடிகனாக மட்டுமல்ல, உள்ளுக்குள் தன்மானமிக்க தமிழன் என்ற இன உணர்வும் கொண்டவராக இருந்தார்” என சீமான் உரையாற்றினார்.