மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே அடுத்தடுத்து இரண்டு கடைகளின் பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சிக்கு உட்பட்ட சேந்தங்குடி பகுதி மயிலாடுதுறை - சீர்காழி முதன்மைச் சாலையில் அமைந்துள்ளது. எப்போதும் வாகனப் போக்குவரத்தும், மக்கள் நடமாட்டமும் நிறைந்து காணப்படும் இந்த முக்கியச் சாலையில் மரகதம் என்பவருக்குச் சொந்தமான கடை இயங்கி வருகிறது. இந்நிலையில், வழக்கம்போல் இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு மரகதம் தனது கடையைப் பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளார். இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர்கள், நள்ளிரவு நேரத்தில் கடையின் பூட்டை நைஸாக உடைத்து உள்ளே புகுந்துள்ளனர்.
கடையின் கல்லாப்பெட்டியில், மரகதம் தொழில் வளர்ச்சிக்காகத் தனியார் நிதி நிறுவனத்தில் (பைனான்ஸ்) கடனாகப் பெற்று வைத்திருந்த 1 லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் சுருட்டிக் கொண்டனர். மேலும், கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் அள்ளிக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
மரகதத்தின் கடைக்கு மிக அருகிலேயே மற்றொரு பேட்டரி கடையும் இயங்கி வருகிறது. துணிச்சலாகச் செயல்பட்ட அந்தக் கொள்ளைக் கும்பல், அந்தப் பேட்டரி கடையின் பூட்டையும் உடைத்து உள்ளே சென்றுள்ளது. அங்கு இருந்த பொருட்கள் மற்றும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலையில் வழக்கம் போல் கடைகளைத் திறப்பதற்காக உரிமையாளர்கள் வந்து பார்த்தபோதுதான் இந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இரண்டு கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு, பொருட்கள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் சிவசெந்தில் தலைமையிலான காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். கொள்ளை நடந்த கடைகளைப் பார்வையிட்ட காவல் ஆய்வாளர், உரிமையாளர்கள் மற்றும் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்.
கொள்ளைச் சம்பவம் நடந்த சேந்தன்குடி பகுதி மயிலாடுதுறை - சீர்காழி பிரதான சாலை என்பதால், அப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். நள்ளிரவில் அந்தச் சாலையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய நபர்கள் மற்றும் சென்ற வாகனங்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை போலீசார் வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய மர்ம நபர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
மயிலாடுதுறை நகருக்கு மிக அருகில், அதுவும் முதன்மைச் சாலையில் அமைந்துள்ள கடைகளில் அடுத்தடுத்து பூட்டை உடைத்து 1 லட்ச ரூபாய் பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும், வியாபாரிகளிடையேயும் மிகுந்த அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் போதிய இரவுக்காவல் மற்றும் ரோந்துப் பணிகளைப் பலப்படுத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்து கொள்ளை போன பணத்தையும் பொருட்களையும் மீட்டுத் தர வேண்டும் என்றும் அப்பகுதி வியாபாரிகள் காவல்துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.