தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடைந்துள்ள நிலையில், தவெக புதிய ஆட்சியை அமைத்துள்ளது. அந்த வகையில் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளார், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 53 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்தை பிடித்தது.
எனவே அதிமுக எம்எல்ஏக்களில் ஒரு பிரிவினர் தவெக ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு கட்டத்தில் இசக்கி சுப்பையா,சத்தியபாமா, ஜெயக்குமார் மற்றும் மரகதம் குமரவேல் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். அடுத்த நிமிடமே தவெக உறுப்பினர் அடையாள அட்டையும் வழங்கப்பட்டது.
இதனையடுத்து அதிமுக எம்எல்ஏக்களை குதிரை பேரம் நடத்தி தவெகவினர் இழுத்து விட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இது தொடர்பாக சபாநாயகரிடமும் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த 4 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக இசக்கி சுப்பையா உள்ளிட்ட 4 முன்னாள் எம்எல்ஏக்களிடம் இரண்டு முறை சபாநாயகர் நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். இந்த விசாரணை தொடர்பாக அதிமுக சார்பாக சபாநாயகரிடமும் விளக்கம் கேட்கப்பட்டது. விசாரணையில் அந்த 4 எம்எல்ஏக்கள் என்ன சொன்னார்கள் என்ற தகவலை தங்களுக்கு தர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் சட்டமன்ற அதிமுக கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தற்போது கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தாங்கள் 13.5.2026-ஆம் நாளன்று அளித்த தகுதி நீக்க மனு தொடர்பாக, நான்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த பதில்கள் மீது கூடுதல் விளக்கம் தேவைப்பட்டதால், கட்சி மாறுதல் காரணம் கொண்டு தகுதியின்மையாக்குதல் விதிகளில் விதி 7(7)-ன் கீழ், பேரவைத் தலைவர் அவர்கள் 3.7.2026 அன்று முனைவர் இசக்கி சுப்பையா, P. சத்தியபாமா எஸ். ஜெயக்குமார் மற்றும் K. மரகதம் குமரவேல் ஆகியோரையும் நேரில் அழைத்து விளக்கம் கோரப்பட்டது.
இதனையடுத்து ஜூலை 9ஆம் தேதி நடைபெற்ற விசாரணையில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக பேரவைத் தலைவர் அவர்கள் இருதரப்பினரையும் அழைத்து மேலும் சில விளக்கங்களை கோர விரும்புவதால், பேரவைத் தலைவர் அவர்கள் அறையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்கள்.
எனவே, அச்சமயத்தில் அவர்கள் விளக்கம் அளிக்கையில், தாங்களும் நேரில் வந்து தங்கள் தரப்பு விளக்கங்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வருகிற ஜூலை 30 ஆம் தேதி காலை 11 மணி முதல் மதியம் 12.30மணிக்குள் 4 முன்னாள் எம்எல்ஏக்களும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவுள்ளனர்.. அப்போது எடப்பாடி பழனிசாமியும் நேரில் வரும்படி சபாநாயகர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அந்த வகையில் அதிமுகவில் இருந்து வெளியேறி தவெகவில் இணைந்த இந்த 4 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.