த.வெ‌.க அரசு கடந்த 3 மாதங்களில் மட்டும் 20,281 கோடியை கடனை வாங்கியுள்ளது  - முன்னாள் அமைச்சர் அதிர்ச்சி தகவல் !
அருண் சின்னதுரை July 26, 2026 06:44 PM

நிர்வாக நடப்புக்கே கடன் வாங்கும் பொழுது  மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா, உயிரற்று போகுமா -முன்னாள் அமைச்சர் ஆர் ‌.பி. உதயகுமார் கேள்வி

முன்னாள் அமைச்சர் ஆர் ‌.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில்
 
"நவீன அரசியல் களத்தில் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் பெரும்பாலும் கவர்ச்சிகரமான, வசீகரமான புனை கதைகளில் மீது அரசியல் கட்டமைக்கப்படுவதை நாம் பார்த்து வருகிறோம். களத்துக்கு வரும் புதிய அரசியல் கட்சிகள் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழலை மாற்றி அமைப்போம் என்றும், மாசற்ற ஒரு மாற்றத்தை தருவோம் என்றும் வாக்குறுதி அளித்து மக்களை தம்பால் ஈர்க்கின்றன. நவீன டிஜிட்டல் பிரச்சாரத்தை மூலதனமாக வைத்து மூளைச்சலவை செய்வதுதான் அரசியல் கட்சியின் பண்பாடா என்று கேட்கின்ற வகையிலே இன்றைக்கு டிஜிட்டல் பிரச்சாரத்தை மூலதனமாக வைத்துக்கொண்டு மூளை சலவை செய்து வருகின்றார்கள்.
 
நடவடிக்கைகளில் தான் அதனுடைய செல்வாக்கு நிரூபிக்கப்படுகிறது
 
சொற்களுக்கும், செயல்களுக்கும் இடையிலான எப்போதும் மாறாத ஒருமைப்பாட்டை நிலைப்பாட்டை வைத்து தான் கட்சியின் செல்வாக்கை மக்கள்  மதிப்பிடுவார்கள் என்பதை த.வெ.க.கட்சி மறந்துதான் போனது. கவர்ச்சிகரமான அரசியல் பேச்சுகளும் வசீகரமான சொல்லாளர்களும், அரசியல் நடவடிக்கைகளை விட வேகமாக ஓட தொடங்கும் போது தொடக்கத்தில் இருக்கும் மக்களின் பேர் எழர்ச்சி நாளடைவில் மங்கி போய் மௌனமான ஆழமான அவநம்பிக்கையாக மாறிவிடும் என்பதுதான் அரசியல் வரலாறு. அரசியல் உரையாடல்கள் வெறும் விளம்பர வெளிச்சமாகவும், காட்சிகள் கூடாரங்களாகவும் சுருங்கி விடப்பட்ட இந்த காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றாலும் கூட கவர்ச்சிகரமான வசனங்கள், கதைகளின் மூலம் தேர்தல்களில் தற்காலிக வெற்றி பெறக்கூடும். ஆனால் ஒரு அரசியல் கட்சியின் நேர்மை என்பது நெருக்கடியான காலங்களிலே அந்தக் கட்சியும், அதன் தலைவரும் எடுக்கும் தொடர் நடவடிக்கைகளில் தான் அதனுடைய செல்வாக்கு நிரூபிக்கப்படுகிறது.
 
விஜயின் கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு  இயல்பாகவே சந்தேகம் ஏற்பட்டது
 
ஒரு கட்சியின் உண்மை சித்தாந்தம் நெருக்கடிகளில் எடுக்கும் முடிவுகளில் தான் வெளிப்படுகிறது ஒரு கட்சி தனது அறிவிக்கப்பட்ட கொள்கைகளை, தற்காலிக அரசியல் லாபங்களுக்காக  திரும்ப விட்டுக் கொடுக்கும் போது, இறுதியில் அந்த தற்காலிக லாபமே அந்த கட்சியின் நிலையான சித்தாந்தமாக  மாறிவிடும் அப்படித்தான் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகையை நாம்  பார்க்கிறோம். இன்றைக்கு காவிரி பிரச்சனை, மேகதாது பிரச்சனை,சட்ட ஒழுங்கு பிரச்சனை, பெண்கள் பாதுகாப்பு ,போதைப் பொருள் நடமாட்டம், மின்வெட்டு பிரச்சனை,  அரசு மருத்துவமனையில் அவல நிலைகள், தமிழகத்தின் கடன் அளவு, கோயில்கள் நிலம் கொள்ளை, நீட் தேர்வு விலக்கு,  லாக்கப் டெத் என்ற  முக்கிய பிரச்சனைகளில் விஜய் வகிக்கும் மௌனம் அதன் தொடக்க கால நிலைப்பாட்டை கேள்விக்குறியாக்கும் போது, விஜயின் கொள்கை ஆழம் குறித்து மக்களுக்கு  இயல்பாகவே சந்தேகம் ஏற்பட்டது
 
மக்கள் எழுச்சி வருமோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 த.வெ‌.க கட்சி தொடக்கத்தில் பிரச்சாரம் செய்ததற்கும், களத்திலே நடைமுறையை படுத்துவதற்கும்  இடைவெளி அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால் மக்கள் புரட்சி வருமோ, மக்கள் எழுச்சி வருமோ, பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒரு அரசியல் கட்சியின் உண்மையான சொத்து அதன் சின்னமும், வசீகர தலைவரோ, அந்த கட்சியை நிதியோ,  அல்ல, கட்சியின் உண்மையான சொத்து நம்பகத்தன்மை மட்டுமே இதுதான் தமிழக அரசியல் வரலாறு  அரசியலில்பொய், வசீகரம், கவர்ச்சி ஒரு தேர்தலில் வேண்டுமானால் வெற்றியை தரக்கூடும்.  ஆனால் அரசியல் அறம் மட்டுமே காலத்தை கடந்து ஒரு கட்சியை உயிர் போல வைத்திருக்கும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும்.
 
20,281 கோடி ரூபாய் த.வெ.க.அரசு கடன் வாங்கி இருக்கிறது.
 
தன் கடந்த மூன்று மாதங்களிலே ஏப்ரல் ,மே, ஜூன் வரையிலான காலங்களில் மட்டும் ரூபாய் 20,281 கோடி ரூபாய் த.வெ.க.அரசு கடன் வாங்கி இருக்கிறது. இந்த முழு ஆண்டிலே இன்னும் 1.22 லட்சம் கோடி கடன் வாங்க த.வெ.க அரசு திட்டமிட்டு உள்ளது. மாநில சரக்கு மட்டும் சேவை வரி, முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு வகைகளிலும் வரி வருவாய் வந்தாலும் தமிழக அரசின் கடன் வாங்குகிற இந்த நிலை எங்கே போகிறது. ஏற்கனவே  தமிழகம் 10 லட்சம் கோடி கடனில் இருக்கிறது‌. நாட்டு மக்களே சிந்திக்க வேண்டிய நேரம் இது‌. நிர்வாக நடப்புக்கே  கடன் வாங்கும் பொழுது நாட்டு மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் உயிர் பெறுமா ,உயிரற்று போகுமா பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.
© Copyright @2026 LIDEA. All Rights Reserved.