24 படங்களுக்குப் பிறகுதான் முதல் வெற்றி... சியான் விக்ரமின் போராட்ட பின்னணி!
ராகேஷ் தாரா July 28, 2026 07:14 PM

இன்று தமிழ் சினிமாவில் கதாபாத்திரத்திற்காக எந்த அளவுக்கும் தன்னை மாற்றிக்கொள்ளத் தயங்காத நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் சியான் விக்ரம். ஆனால் இன்று அவர் அனுபவிக்கும் வெற்றிக்குப் பின்னால், கிட்டத்தட்ட ஒரு தசாப்த கால போராட்டமும், தொடர்ச்சியான தோல்விகளும், உயிரையே பறித்துவிடும் அளவுக்கு மோசமான விபத்தில் இருந்து மீண்ட மன உறுதியும் மறைந்திருக்கிறதுபலருக்கும் ஆச்சரியமாக, விக்ரமுக்கு முதல் மிகப்பெரிய வெற்றி கிடைத்தது அவரது 24-ஆவது திரைப்படமான 'சேது' மூலம்தான்.

23 படங்கள் தோல்வி 

1990-ஆம் ஆண்டு வெளியான 'என் காதல் கண்மணி' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான விக்ரம், அதன் பிறகு தந்து விட்டேன் என்னை, மீரா, காவல் கீதம், புதிய மன்னர்கள் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார். அவரது நடிப்பு கவனிக்கப்பட்டாலும், அந்தப் படங்கள் எதுவும் அவருக்கு வணிக ரீதியாக பெரிய வெற்றியையோ, முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தையோ பெற்றுத் தரவில்லை.

தமிழில் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையாததால், மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் தனது அதிர்ஷ்டத்தை சோதித்தார். மலையாளத்தில் த்ருவம், மாஃபியா, சைன்யம், ராஜபுத்ரன், இந்திரபிரஸ்தம், மயூரநிருத்தம், இது ஒரு ஸ்நேககாதா உள்ளிட்ட படங்களில் நடித்தார். மம்முட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தபோதும், பெரும்பாலும் துணைக் கதாபாத்திரங்களே அவருக்குக் கிடைத்தன.

தெலுங்கிலும் சிருநவ்வுல வரமிஸ்தாவா, பங்காரு குடும்பம், குர்ரால ராஜ்யம், 9 நேலாலு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அங்கும் எதிர்பார்த்த திருப்புமுனை கிடைக்கவில்லை. இதற்கிடையில் தனது சினிமா பயணத்தைத் தொடர்வதற்காக, அப்பாஸ், பிரபுதேவா, ஆரம்பகால அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு பின்னணிக் குரலும் கொடுத்து வந்தார்.

விபத்து

இந்தப் போராட்டக் காலத்தில் விக்ரம் சந்தித்த மிகப்பெரிய சவால் சாலை விபத்துதான். கல்லூரி நாட்களில் நடந்த மோசமான விபத்தில் அவரது காலில் கடுமையான காயம் ஏற்பட்டது. பல மாதங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், இனி சாதாரணமாக நடப்பதே சிரமமாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதாக பல பேட்டிகளில் நினைவுகூர்ந்துள்ளார். இருப்பினும் சுமார் மூன்று ஆண்டுகள் சிகிச்சை, அறுவை சிகிச்சைகள் மற்றும் பிஸியோதெரபி மூலம் மீண்டு, நடிகராக வேண்டும் என்ற தனது கனவை கைவிடாமல் தொடர்ந்து முயன்றார். அந்த விபத்தே அவரது சினிமா அறிமுகத்தையும் பல ஆண்டுகள் தள்ளிப்போனதாகவும் கூறப்படுகிறது.

முதல் வெற்றி

இப்படியாக சுமார் ஒன்பது ஆண்டுகள் போராடிய பிறகுதான் இயக்குநர் பாலா இயக்கிய 'சேது' திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அந்தக் கதாபாத்திரத்திற்காக தனது உடல் எடையை கணிசமாகக் குறைத்து, தோற்றத்தையே மாற்றிக்கொண்டார். ஆரம்பத்தில் பெரிய வரவேற்பு இல்லாமல் வெளியான அந்தத் திரைப்படம், பின்னர் ரசிகர்களின் வாய்மொழி பாராட்டால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. காதலில் தோல்வியடைந்த இளைஞனாகவும், பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதராகவும் விக்ரம் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் ஆச்சரியப்படுத்தியது. அந்த ஒரே திரைப்படம் அவரது வாழ்க்கையையே மாற்றிய திருப்புமுனையாக அமைந்தது.

'சேது' வெற்றிக்குப் பிறகு தில், ஜெமினி, தூள், சாமி, காசி, பிதாமகன், அந்நியன் உள்ளிட்ட வெற்றிப் படங்கள் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்தார். குறிப்பாக 'பிதாமகன்' திரைப்படத்திற்காக தேசிய சிறந்த நடிகருக்கான விருதை வென்று, இந்திய அளவில் தனது நடிப்புத் திறனை நிரூபித்தார்.

அஜித் விஜய் போல் மிகப்பெரிய ஸ்டார் அந்தஸ்த்தை எட்டாவிட்டாலும் தனது நடிப்பாலும் கடின உழைப்பாலும் தனக்கென இந்திய அளவில் ரசிகர்களை கொண்டிருக்கிறார் விக்ரம். 

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.