திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவை மாற்றம்!
Seithipunal Tamil September 20, 2024 07:48 PM

திருச்சி வழியாக செல்லும் ரெயில் சேவை பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

திருச்சி ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது:-

திருச்சி ரெயில்வே கோட்டத்தில் ரெயில்வே வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து கொண்டு வருவதால்  அந்த வழியாக செல்லும் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற 22-ந்தேதி மற்றும் 24-ந்தேதி திருச்சியில் இருந்து மாலை 6 மணிக்கு விழுப்புரம் வரை செல்லும் திருச்சி - விழுப்புரம் மெமு ரெயில் விருத்தாசலம் வரை மட்டுமே இயக்கப்படும். 

இதனை தொடர்ந்து, வருகிற 23-ந்தேதி மற்றும் 25-ந்தேதிகளில் விழுப்புரத்தில் இருந்து காலை 5.10 மணி அளவில் திருச்சி வரை இயங்கும் விழுப்புரம் - திருச்சி மெமு ரெயில் விருதாச்சலத்தில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு செல்லும். விழுப்புரம் - விருத்தாசலம் இடையே இந்த ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. 

பின்னர், வருகிற 26-ந்தேதி திருச்சி வழியாக கன்னியாகுமரியில் இருந்து உத்தர பிரதேச மாநிலம் பெனாரஸ் வரை செல்லும் கன்னியாகுமரி - பெனாரஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூர், விருத்தாசலம், விழுப்புரம் வழியாக மாற்றுப்பாதையில் இயங்கும்.

திருச்சி வழியாக திருச்செந்தூரில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு சென்னை எக்மோர் வரை செல்லும் திருச்செந்தூர் - சென்னை எக்மோர் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 22, 24, 26-ந்தேதிகளில் 2.10 மணி நேரம் தாமதமாக இரவு 10.35 மணிக்கு புறப்படும்.

வருகிற 22, 23-ந்தேதிகளில் நாகர்கோவில் - தாம்பரம் வாரந்திர சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் இருந்து 1.15 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும். மேலும் சென்னை எக்மோர் - மதுரை தேஜஸ் ரெயில் சென்னையில் இருந்து வருகிற 25-ந்தேதி 1.40 மணிநேரம் தாமதமாகவும், மறுமார்க்கமாக மதுரை - சென்னை எக்மோர் ரெயில் மதுரையில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்லும்.

இவ்வாறு ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.