திருவண்ணாமலை உள்ள பச்சையம்மன் கோயில் அருகே 'திரு அண்ணாமலையில் நேற்று காலை தீப்பற்றி எரிந்தது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் தீவிரமாக இருந்ததால், மலையில் இருந்த செடிகள் மற்றும் மரங்களில் வேகமாக தீ பரவி, கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் திரு அண்ணாமலையில் வாழ்ந்து வரும் மான்கள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகள், அபாய குரல் எழுப்பியவாறு பாதுகாப்பான இடத்தை தேடி ஓடியது. மேலும் சில விலங்குகள் தீயில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது.
தீப்பற்றி எரிவது குறித்து, அப்பகுதி மக்கள் தெரிவித்த தகவலின் பேரில், திருவண்ணாமலை வனத்துறையினர், திரு அண்ணாமலைக்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அரிய வகை மூலிகைச் செடிகள், மரங்கள் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து வனச்சரகர் சரவணன் கூறும்போது, 'திரு அண்ணாமலை காப்புக்காட்டில் தீப்பற்றி எரியும் தகவல் கிடைத்ததும், 3 வனத்துறையினர் விரைந்து சென்று, ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர்.
வெளி நபர்கள் தீ வைத்திருப்பதற்கு வாய்ப்பு குறைவு. வெளியில் தாக்கம் அதிகம் உள்ளதால், தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம். சுமார் ஒரு ஏக்கர் இடம் எரிந்து சேதமடைந்தது. இயற்கையான தீ விபத்து தான்' என்றார். பக்தர்கள் கூறும் போது, 'திரு அண்ணாமலையில் சமூக விரோத கும்பல் நடமாட்டம் அதிகளவில் உள்ளன. அவர்களால் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. அவர்களது நடமாட்டத்தை வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து கட்டுப்படுத்தினால், திரு அண்ணாமலையில் தீப்பற்றி எரியாது' என்றனர்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா