இன்று அதிகாலை 4 மணி முதலே சென்னையிலும், சென்னை புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து நகரைக் குளிர்வித்தது. சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாகவே வெப்பம் அதிகரித்து வந்த நிலையில், இரவு நேரத்தில் சில இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்றிரவு சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்த நிலையில், இன்று அதிகாலை சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 25ம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் செப்டம்பர் 25ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும் என்றும் இரவு நேரங்களிலும், அதிகாலை நேரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வெதர்மேன் தெரிவித்துள்ளார். சென்னையில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் போட்டிகளுக்கு மழை இடையூறாக இருக்காது என்பது கூடுதல் தகவல்.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா