Dhanush : நீதிமன்றத்தில் ஆஜராகாத தனுஷ் ஐஸ்வர்யா...விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு
ராகேஷ் தாரா October 19, 2024 04:14 PM

தனுஷ்

நடிகர் தனுஷ் கடந்த 2004 ஆம் ஆண்டு ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா லிங்கா என இரு மகன்கள் உள்ளனர். 20 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற இருப்பதாக அறிவித்தனர். இந்த தகவல் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விவாகரத்து அறிவித்திருந்தாலும் தங்களது மகன்களின் எதிர்காலத்திற்காக  மீண்டும் சேர்ந்து வாழ இருவரும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. 

தற்போது யாத்ரா மற்றும் லிங்கா ஆகிய இருவரும் தந்தையுடன் கொஞ்ச நாட்களும் அண்ணையுடன் கொஞ்ச நாட்களும் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் தனுஷ் தனது குடும்பத்துடன் இணைந்து விடுவார் என்கிற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். இதனை உறுதிபடுத்தும் விதமாக தனுஷ் ஐஸ்வர்யாவின் சமூக வலைதள பதிவுகளை லைக் செய்திருந்தார்.

விவாகரத்து வழக்கு ஒத்திவைப்பு

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா கடந்த ஏப்ரல் மாதம் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார்கள். இந்த வழக்கு கடந்த அக்டோபர் 3 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால் இந்த வழக்கு அக்டோபர் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இரண்டாவது முறையாகவும் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வழக்கு மீண்டும் நவம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்னொரு முறை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 

அடுத்த விசாரணைக்குள் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் நிலைப்பாடு என்னவென்பதை தெரியப்படுத்துவார்கள் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள். 

இட்லி கடை

நடிகர் தனுஷ் தற்போது இட்லி கடை படத்தை இயக்கி வருகிறார். நித்யா மேனன் நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். டாவ்ன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. அடுத்தடுத்த படங்களில் நடித்தும் இயக்கியும் வருவதால் தனுஷ் நீதிமன்றத்திற்கு வர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.