இன்று திருச்சி, சேலம் உட்பட 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | வளிமண்டல மேலடுக்கு சுழற்சி!
Dinamaalai October 21, 2024 12:48 PM

தமிழகத்தின் கடலோர பகுதிகளையொட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக இன்று தமிழகத்தில் திருச்சி, சேலம், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் 3 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று அக்டோபர் 21ம் தேதி ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை ஆகிய 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

நாளை அக்டோபர் 22ம் தேதி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை ஆகிய 16 மாவட்டங்கள், காரைக்கால் பகுதியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

நாளை மறுநாள் அக்டோபர் 23ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 24, 25, 26-ம் தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, மதுரை மாவட்டம் சாத்தியாரில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “மத்திய கிழக்கு வங்கக்கடல், அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று (அக்.21) உருவாக உள்ளது. இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (அக்.22 ) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இது மேலும் வலுவடைந்து, 23-ம் தேதி புயலாக மாறும் என்று தெரிகிறது. பின்னர், இந்த புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா - மேற்கு வங்க கடலோர பகுதிகளுக்கு இடையே 24-ம் தேதி கரையை கடக்கக்கூடும்” என கூறப்பட்டுள்ளது. 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.