சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், காதலனுடன் ஆசையாசையாக ஜாலி பைக் ரெய்டு சென்ற கல்லூரி மாணவி, காதலன் கண் எதிரே லாரி மோதி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியான சம்பவ பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் படித்து வந்த மாணவி கேத்தரின் மற்றும் அவரது காதலனும் தங்களது இருசக்கர வாகனத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து ஓ.எம்.ஆர் சாலைக்கு செல்லும் கலைஞர் கருணாநிதி சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் பைக்கில்க் பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றுக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனம், சாலையில் விதிமுறையை மீறி அதிகளவில் இடதுபுறம் வந்த நிலையில், அந்த வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் இவர்கள் சிறிது நகர்ந்த போது பின்னால் இருந்து வந்துக் கொண்டிருந்த கழிவுநீர் லாரி இவர்கள் பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி இவர்கள் இருவரும் கீழே விழ, கல்லூரி மாணவி கேத்தரின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்தம் வெளியேறி கேத்தரின் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்துக் குறித்து தகவல் அறிந்த அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் மற்றும் நீலாங்கரை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து ஏற்படுத்திய கழிவுநீர் லாரியின் ஓட்டுநரைக் கைது செய்தனர். அதை தொடர்ந்து கழிவுநீர் லாரியில் சிக்கி பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்துக் குறித்து வழக்குப்பதிவு செய்து அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.