அருந்ததியர் சமூக மக்களுக்கு வழங்கப்பட்ட உள் ஒதுக்கிட்டு அரசாணையை ரத்து செய்யக்கோரி, வருகின்ற நவம்பர் ஏழாம் தேதி சென்னையில், புதிய தமிழகம் கட்சி சார்பாக பேரணி நடைபெறும் என்று, அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவிக்கையில், தமிழகத்தின் பூர்வீக தமிழ் குடிமக்களான தேவேந்திர குல வேளாளர் மற்றும் ஆதிதிராவிடர் ஆகிய இரு சமூகத்தை சேர்ந்த லட்சக்கணக்கான பேரின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை தட்டிப் பறிக்கும் அருந்தியர்களுக்கு, அனைத்து இடங்களையும் தாரை வார்க்கின்ற அருந்ததியர் உள் ஒதுக்கீடு அரசாணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கு சட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு தலா பத்து ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். அவர்களின் வாழ்வுரிமையை மாஞ்சோலை பகுதியிலேயே நிலை நாட்ட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடி, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும்.
தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கும் ஆதி திராவிட மக்களுக்கும் நடக்கின்ற வன்கொடுமைகளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை முன் நிறுத்தி, புதிய தமிழகம் கட்சி சார்பில் வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி சென்னை ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம்" என்று டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.