கேரளா மாநிலத்தில் திரிச்சூரில் இருந்து மூணாறுக்கு பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்துள்ளனர். மூணாறுக்கு வருவதற்கு முன்பாக உணவு ப்ரேக்கிற்காக பள்ளி பேருந்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது நான்கு மாணவர்கள் தீப்பெட்டி தேடி அலைந்துள்ளனர்.
அப்போது, பக்கத்தில் போதைப் பொருள் தடுப்புப்பிரிவு காவல் நிலையத்திற்கு வெளியே பழைய கார், பைக் நிறுத்தப்பட்டிருந்ததை மாணவர்கள் பார்த்துள்ளனர். இந்த இடத்தை ஒர்க் ஷாப் என்று நினைத்து வந்த மாணவர்கள் உள்ளே சென்று மப்டியில் இருந்த ஒரு போலீசாரிடம் தீப்பெட்டி கேட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் அலுவலகத்திற்கு உள்ளே சீருடையில் போலீஸ் இருப்பதை பார்த்து 2 மாணவர்கள் பயந்து ஓடியுள்ளனர். மற்ற 2 மாணவர்களை போலீசார் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது ஒரு மாணவரிடம் இருந்து 5 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
உடனே போலீசார் பள்ளி ஆசியர்களை அழைத்து விசாரித்து, பள்ளி வாகனத்தை சோதனையிட்டுள்ளனர் . அப்போது 1 கிராம் அளவுள்ள 'ஹாசிஸ் ஆயில்' என்ற போதைப்பொருளை போலீசார் கைப்பற்றினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.