Vijay TVK Politics: நடிகர் விஜயை அரசியல்வதியாக மாற்றிய தருணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அறிமுகமான நேரத்தில் ”இந்த மூஞ்சியை பாக்க திரையரங்கிற்கு வரவேண்டுமா” என மோசமான விமர்சனத்துடன் தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் விஜய். ஆனால், இன்று இந்திய அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளில் அவர் சந்தித்த ஏற்ற, இறக்கங்கள் ஏராளாம். ஆனாலும் கடின உழைப்பின் காரணமாக தமிழ் சினிமாவின் வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து, இளைய தளபதி என்பது தளபதி ஆக, உச்சபட்சமாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் எனும் ஆளுமையாக விஜய் உருவெடுத்துள்ளார்.
தந்தையின் ஆதரவுடன் சினிமாவிற்காக வந்தவராக இருந்தாலும், ஆரம்ப காலங்களில் அவருக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கவில்லை. நீண்ட கால காத்திருப்புக்கு பிறகே குடும்ப ரசிகர்களை கவரும் விதமான படங்கள் மூலம் தனக்கான இடத்தை தக்க வைத்தார். 2000-ஆவது ஆண்டின் தொடக்கத்திற்கு பிறகு திருமலை, கில்லி, திருப்பாச்சி, சிவகாசி போன்ற ஆக்ஷன் படங்கள் மூலம், தமிழக எல்லையை கடந்து ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்தார். மினிமம் கேரண்டி ஹீரோ என்ற அந்தஸ்திலிருந்து வசூல் சக்ரவத்தியாக உருவெடுத்தார். இதன் மூலம், 'நாளைய தீர்ப்பு' படத்தில் கதையின் நாயகனாக ஆரம்பித்த விஜயின் பயணம் லவ்வர் பாய், ஆக்ஷன் ஹீரோ, வசூல் நாயகன் என அடுத்தடுத்து பிரமாண்டமாக உருவெடுக்க, இப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற நிலையை எட்டியுள்ளார்.
பெரிதும் பேசாமால், தான் உண்டு, தனது திரைப்படம் உண்டு என இருந்தவர் தான் விஜய். ஆனால், ஒரு கட்டத்திற்கு பிறகு தனது ஒவ்வொரு திரைப்படத்தின் இசைவெளியீட்டின்போதும், விஜய் பேசிய அரசியல் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. தனது படங்களுக்கு ஏற்படும் பிரச்னையின் காரணமாக அவர் அரசியல் பேசுகிறாரா அல்லது அரசியல் பேசுவதால் அவரது திரைப்படங்களுக்கு சிக்கல் ஏற்படுகிறதா என்று விவாதிக்கப்படும் அளவுக்குப் பல சர்ச்சைகள் வெடிக்கத் தொடங்கின. இதற்கான விதை போடப்பட்டது 2010ம் ஆண்டிற்கு பிறகு தான் என்று கூற வேண்டும். காரணம் 2010க்கு பிறகு வெளியான விஜயின் பல திரைப்படங்கள் சர்ச்சையில் சிக்கின.
கடந்த 2011ஆம் ஆண்டு வெளியான காவலன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமம் பெறுவதில் ஏற்பட்ட பிரச்னை பட வெளியீட்டில் பூதாகரமானது. அரசியல் தலையீடுகளும் அதிகரிக்க படம் திரைக்கே வர முடியாது என்னும் நிலை ஏற்பட்டது. பின்பு விஜயின் தீவிர முயற்சியால் அந்த படம் வெளியானது.
2013ம் ஆண்டில் உருவான விஜயின் 'தலைவா' திரைப்படத்தின் டைட்டிலுக்கு கீழே, "வழிநடத்திச் செல்வதற்கான நேரம்" என்பதைக் குறிக்கும் வகையில், Time to Lead என்ற வரிகள் எழுதப்பட்டிருந்தன. அப்போதைய ஆளும் கட்சி, இதனை விரும்பவில்லை எனக் கூறப்பட்டது. திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகக் கூறி தமிழ்நாட்டில் படத்தின் வெளியீடு ஒத்தி வைக்கப்பட்டது. இதற்குப் பிறகு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க படக் குழுவினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கான அனுமதி கிடைக்கவில்லை. விஜய்க்கு அரசியலுக்கு வரும் ஆசை இருப்பதாலேயே இத்தனை தடைகள் உருவானதாக விவாதங்கள் எழுந்தன.
கத்தி திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்ததை முன்னிறுத்தி, படத்தை வெளியிட சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையெல்லாம் தாண்டி படம் வெளியானபோது, படத்தில் வந்த `காற்றை வைத்து ஊழல் செய்கின்ற நாடு இது ` என்ற வசனம் அரசியல் ரீதியான அதிர்வலைகளை ஏற்படுத்தியது. புலி படம் வெளியிடுவதற்கு முந்தைய நாள் விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
2017ம் ஆண்டு வெளியான விஜயின் மெர்சல் திரைப்படத்தில் ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை விமர்சிக்கப்பட்டதற்கு, அபோதைய பாஜக தமிழக தலைவர் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார். படம் வெளியிடுவதற்கு முதல் நாள் வரை சென்சார் சான்றிதழ் கிடைக்காமல் இருந்து, பிறகு ஒரு வழியாகப் படம் வெளியானது. பாஜகவினர் தொடர்ந்து மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்க, ராகுல் காந்தி மற்றும் ஸ்டாலின் உட்பட பல அரசியல் தலைவர்களும் விஜய்க்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
2018ம் ஆண்டு வெளியான சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், "இந்தப் படத்தில் நான் முதலமைச்சர் வேடத்தில் நடிக்கவில்லை. நிஜத்தில் நான் முதலமைச்சரானால் நடிக்க மாட்டேன். தலைவன் நல்லவனாக இருந்தால் எல்லாமே நல்லதாக மாறும். நெருக்கடியான நேரத்தில் ஒரு நல்ல தலைவன் வருவார். அவர் நல்ல சர்கார் அமைப்பார்," என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சுதான் விஜய் அரசியல் குறித்து நேரடியாகப் பேசிய முதல் பேச்சாக அமைந்தது. சர்கார் படத்தில் அரசு தரும் இலவசங்கள் குறித்து அவர் விமர்சித்திருந்ததும் பேசுபொருள் ஆனது.
தொடர்ந்து, பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய், ''எவனை எங்கே உட்கார வைக்க வேண்டுமோ, அவனை அங்கே கரெக்டா உட்கார வைத்தீர்கள் எனில், இந்த கோல்டு மெடல் தானாக வந்து சேரும்'' என்றார். அவருடைய பேச்சுக்கு அதிமுக மற்றும் பாஜக தரப்பில் இருந்து எதிர்ப்புகள் குவிந்தன.
அரசியல் தொடர்பான விஜயின் ஒவ்வொரு கருத்தும் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் தரத் தொடங்கின. தமிழ்நாட்டை தலைமை தாங்க விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அழைப்பு விடுக்க தொடங்கினர். அதன் விளைவாகவே, நாளை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளது,
ஒருபுறம் அரசியல் கருத்துகளை ஆவேசமாக் பேசிவந்த விஜய், மறுபுறம் தனது ரசிகர்களுக்கு அரசியல் பழக்குவற்கான பணிகளையும் தீவிரப்படுத்தினார். அதன் முதல் நடவடிக்கையாக,தனது ரசிகர் மன்ற இயக்கத்தை 2009ஆம் ஆண்டு மக்கள் இயக்கமாக மாற்றினார் . காவலன் திரைப்பட பிரச்னைக்குப் பிறகான காலகட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தின் பணிகளில் தீவிரம் காட்டத் தொடங்கினார். ரசிகர்களை அடிக்கடி சந்தித்து, அதனை வலுவாக்க தொடங்கியதோடு, மாநிலத்தின் பட்டி தொட்டி எங்கும் விரிவுபடுத்தினார். அதன் விளைவாகவே, 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவிற்கு விஜய் ஆதரவு கொடுத்ததும், வெற்றிக்குப் பிறகு 'இந்த வெற்றியில் ஒரு அணிலைப் போல் உதவினோம்' என்று சொன்ன சம்பவங்களும்நிகழ்ந்தன.
மெர்சல் சர்ச்சைகளை தொடர்ந்து மக்கள் இயக்கப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. மகளிரணி, மாணவரணி தொடங்கி கிளைக் கழகங்கள் வரை திட்டமிட்டு, அதன் உட்கட்டமைப்பை கிட்டத்தட்ட ஓர் அரசியல் கட்சிக்கு நிகராய் கட்டமைத்ததாக கூறப்படுகிறது. இதனிடையே, கடந்த ஆண்டு தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கினார். இது எதிர்கால வாக்காளர்களை கவர்வதற்கு விஜய் முன்னெடுத்த வியூகமாகவே கருதப்பட்டது. அப்போது மாணவர்களிடையே பேசிய விஜய்,”தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக்கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் எனக் கூறுங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும்" என்று வலியுறுத்தினார்.
அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று விஜய் தரப்பில் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கத்தினர் பிற கட்சிகளில் பொறுப்புகளில் இருந்தால் ராஜினாமா செய்ய அறிவுறுத்தப்பட்டது.
இப்படி விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது அது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் இயக்கமாக மாறியுள்ளது. 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை இலக்காக நிர்ணயித்துள்ள விஜய், தனது கட்சியின் முதல் மாநில மாநாட்டை நடத்த முழு வேகத்தில் தயாராகியுள்ளார். இனி அவரது கொள்கைகளும், செயல்பாடுகளும் தமிழக மக்களை கவருமா என்பது தேர்தல் களத்தில் தான் வெளிப்படும்.