திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு 7 வயது மகன் உள்ளார். ஆவடி விமானப்படை பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று (ஜனவரி 31) மாலை 5 மணியளவில் இந்திய விமானப்படை முகாம் மைதானத்தில் சிறுவன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தான்.
அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு இரும்பு கால்பந்து கோல் கம்பம் சிறுவனின் தலையில் விழுந்தது. சிறுவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் உடனடியாக சிறுவனை மீட்டு, போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அப்போது, மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், முத்தாபுதுப்பேட்டை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மைதானத்தில் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மீது இரும்பு கோல் கம்பம் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.