வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் சுப முகூர்த்தம் நாட்களையொட்டி 1.50 லட்சம் பேர் சிறப்பு பேருந்தில் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தை மாத வளர்பிறை முகூர்த்த தினங்கள் மற்றும் வார விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என்பதனை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்டது.
அதைப் போலவே சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, கடந்த பிப்ரவரி 1ம் தேதி நள்ளிரவு விவரத்தின் படி தினசரி இயக்கும் 2,092 பேருந்துகளுடன் கூடுதலாக 646 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் 1,50,590 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.