தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவோணம் பகுதியில் 10 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் சிறுமி பள்ளியில் கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பயத்துடனும், அதிர்ச்சி அடைந்தார் போல் காணப்பட்டுள்ளார். அதனை கவனித்த அவரது ஆசிரியர் சிறுமியை அழைத்து விசாரித்த போது தன்னிடம் இருவர் நடந்து கொண்ட விதத்தை பற்றி பயந்து கொண்டே கூறியுள்ளார்.
இதனை புரிந்து கொண்ட ஆசிரியர் அவரது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து சிறுமி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர்கள் ஓரத்தநாடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35), முகிலரசன் (40) என்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் சிறுமிக்கு தின்பண்டம் வாங்கிக் கொடுப்பதாக கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர்.
மேலும் இவர்கள் வசித்து வரும் கிராமத்தில் உள்ள பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுப்பது போன்ற தவறுகளை செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இதனை அடுத்து இருவரையும் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது