காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம். ஏப்ரல் 8 மற்றும் 9ம் தேதிகளில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அகமதாபாத் சென்றிருந்தார். 84வது தேசிய மாநாடு அகமதாபாத்தில் நடைபெறுகிறது.
ப.சிதம்பரம் நேற்று அங்குள்ள சபர்மதி ஆசிரமம் சென்றிருந்த நிலையில் அங்கு திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் ப.சிதம்பரத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவர் ஆம்புலன்சில் கொண்டு செல்லப்படும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக ப.சிதம்பரம் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவர் சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவர் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என தெரிவித்திருந்தார். ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும்படி உடனடியாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் பிரதமர் மோடி உத்தரவு பிறப்பித்தார்
இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து விவரம் கேட்டறிந்தார். குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிதம்பரத்திற்கு தேவையான மருத்துவ உதவிகள் குறித்து நலம் விசாரித்தார்.
இந்நிலையில் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டுவிட்டது. அனைத்து சோதனைகளும் இயல்பாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நான் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன் அனைவருக்கும் நன்றி என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.