மனிதரோட வாழ்க்கைல ரோடு ரோலர் எது? ஆடி கார் எது? நாகேஷ் சொன்ன உண்மை
Tamil Minutes April 23, 2025 03:48 AM

நகைச்சுவை நடிகர் நாகேஷ் வெறும் காமெடியன் மட்டுமல்ல. குணச்சித்திர நடிகரும்கூட. வெறும் குணச்சித்திர நடிகர் மட்டுமல்ல. சிறந்த அனுபவசாலியும்கூட. அந்த வகையில் அவர் உதிர்த்த வாழ்க்கைத் தத்துவம் ஒன்றைப் பார்ப்போமா…

ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள். சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும்….கிளாவர் எது ,ஹாட்டின் எது, ஸ்பேடு எது ,டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று….அது போல தான் மனிதர்களின் சுயரூபங்களும். தேவை இல்லாத விஷயங்களில் தலையிட்டால் ஆட்டத்தில் 14வது சீட்டைப் போல தூக்கி எறியப்படுவீர்கள்.

பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்.ரோடு ரோலர் வண்டி போல.சுயநலம் உள்ளவன் வாழ்க்கை மிக வேகமாக போகும்.ஆடி கார் போல.வேகமாக செல்லும் ஆடி காரினால் மற்றவர்களுக்கு எந்த பயனும் இல்லை. மெதுவாக செல்லும் ரோடு ரோலர் தான் மக்கள் அன்றாடம் செல்லும் பாதையை சரி செய்கிறது.

ஒருவன் ரோட்டில் நடந்து போய்க் கொண்டிருந்தான்.போகும் வழியில் காலில் ஏதோ தட்டுப்பட்டது. அது ஒரு முழு தேங்காய்.அவன் அதை எட்டி உதைத்து விட்டு போய்க்கொண்டு இருந்தான். அவனுக்கு பின்னால் வந்து கொண்டிருந்த ஒரு புத்திசாலியின் காலில் அதே தேங்காய் தட்டுப்பட்டது. அவன் தேங்காயை எடுத்து இரண்டாக உடைத்து இளநீரை குடித்தான்.

அந்த தேங்காயை நன்றாக துருவி வீட்டில் பாயாசத்தில் போட்டு விட்டு 2 தேங்காய் ஓடுகளையும் ரோட்டில் தூக்கி எறிந்தான். அந்த 2 தேங்காய் ஓடுகளும் இன்னொரு அதி புத்திசாலியின் கையில் கிடைத்தது. அவன் அந்த 2 தேங்காய் ஓடுகளையும் 2 அகப்பைகளாக செய்து 10 ரூபாய் பெறுமானமுள்ள தேங்காயை 20 ரூபாயக்கு விற்று முதலீடு ஆக்கிக் கொண்டான். இப்போது தன்னைப் பிரிந்த தேங்காயை இந்த பாயாசத்தில் முக்கி எடுக்கும் போது அகப்பை சந்தித்துக் கொண்டது.இதுதான் வாழ்க்கை.. இதுதான் பயணம் என்கிறார் நாகேஷ்

 

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.