ஈரோடு வாய்க்கால் மேடு, இந்தியன் நகர் முதலாவது வீதியை சேர்ந்தவர் சீராளன். இவருடைய மகன் 35 வயது பிரவீன். என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்துவந்தவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்த பிரவீன் பெங்களூருவுக்கு திரும்பி செல்லாமல் வீட்டில் இருந்தே வேலை பார்த்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் அவதிப்பட்ட அவர் யாருடனும் பேசாமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று மாலை பிரவீன் நடைபயிற்சி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு வெளியிலோ சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அங்குள்ள கிரிக்கெட் மைதானம் அருகேயுள்ளகிணற்று பகுதியில் பிரவீனின் செருப்புகள் கிடந்துள்ளன. இதை பார்த்த உறவினர்கள் பிரவீன் கிணற்றில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரோடு தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை தொடர்ந்து, போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அங்கு வந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி பிரவீனை தேடிப்பார்த்ததில் பிரவீன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணை நடத்தியுள்ளனர்.
பிரவீன் 35 வயது ஆகியும் திருமணமாகாத ஏக்கத்தில் இருந்துள்ளார். இந்த விரக்தியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.