இந்திய ஒலிம்பிக் பதக்கம் பெற்ற புகழ்பெற்ற குத்துச்சண்டை வீராங்கனை மேரிகாம், தனது கணவர் கருங்க் ஒன்கோலருடன் சட்டபூர்வமாக விவாகரத்து செய்து கொண்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 2023 டிசம்பர் 20ஆம் தேதியன்று KOM பழங்குடி மரபின்படி, இருவரும் குடும்பத்தினரின் முன்னிலையில் சம்மதத்துடன் விவாகரத்து செய்ததாக, அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்துவருவதாகவும், இது ஒப்பந்த விவாகரவு என்று மேரிகாம் தெரிவித்துள்ளதோடு, இதற்கான காரணம் வேறு எந்த நபரும் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமீபமாக சமூக ஊடகங்களில் மற்றும் சில ஊடகங்களில், மேரிகாம் தனது வணிக கூட்டாளி ஹிதேஷ் சௌதரி மற்றும் மற்றொரு குத்துச்சண்டை வீரரின் கணவருடன் உறவில் இருப்பதாக பரவிய வதந்திகளை கடுமையாகக் கண்டித்து, அவை முற்றிலும் பொய்யானவை என மேரிகாம் தெரிவித்துள்ளார். இந்த வதந்திகள் அவரது மதிப்புக்கு எதிரானவையாக இருப்பதோடு, அவரது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் உள்ளது. இதுபோன்ற வதந்திகளை பரப்பும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவை குற்றவியல் ரீதியாகவும் கருதப்படும் என்று அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தனது சமூக ஊடக கணக்கில் இந்த அறிக்கையை பகிர்ந்துள்ள மேரிகாம், கடந்த இரண்டு ஆண்டுகளில் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கடுமையான சோதனைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், தற்போதைய நிலையில் தனக்கு அமைதி மற்றும் தனியுரிமை தேவைப்படுகிறது என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். “நான் ஒரு விளையாட்டு வீராங்கனையாக மட்டுமல்ல, ஒரு பெண்ணாகவும், ஒரு தாயாகவும் இந்த நேரத்தில் மனநிலை சீராக இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. எனவே ஊடகங்கள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எனது தனிப்பட்ட வாழ்வை மதிக்க வேண்டுகிறேன்,” என மேரிகாம் தெரிவித்துள்ளார். அனைத்து ஊடகங்களும் இந்த எச்சரிக்கையை கருத்தில் கொண்டு பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.