கேரள மாநிலம் பாலக்காடு அருகே மாட்டு மந்தையைச் சேர்ந்தவர் அஞ்சு(26). இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஸ்ரீஜன் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று அஞ்சு தனது மகன் மற்றும் தோழி ஆகியோருடன் பாலக்காட்டில் இருந்து ஒத்தப்பாலம் லக்கிடி பகுதியிலுள்ள பாரம்பரிய வீட்டை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.
இந்த நிலையில் கல்லேகாடு பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஸ்கூட்டர் நிலைதடுமாறி சாலையோரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய்கள் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அஞ்சுவும், அவரது மகனும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அஞ்சுவின் தோழியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தாய் மகனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.