"ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டுள்ளன" என்று இந்திய பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
மே 8 (வியாழக்கிழமை) இரவு இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார்.
ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது, அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என இந்திய அரசு ஊடகமான டிடி நியூஸ் தெரிவித்துள்ளது.
ஜம்முவில் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், நகரம் முழுவதும் சைரன்கள் ஒலிக்கப்படுவதாகவும் இந்திய ராணுவ வட்டாரங்கள் பிபிசியிடம் தெரிவித்தன.
இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியதாகவும், அவை முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.
தாக்குதலை நேரில் பார்த்த ஒருவர் ஜம்மு விமான நிலையத்தின் அருகே வெடிபொருட்களின் 16 சிதறல்களைப் பார்த்தாக பிபிசியிடம் கூறினார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், சைரன் சத்தம் கேட்பதாகவும் அங்கிருந்த மக்கள் கூறுகின்றனர்.
கத்துவாவில் உள்ள மக்கள் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்களைக் கேட்டுள்ளனர். மேலும் இங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. கத்துவா ஜம்முவிலிருந்து ஒன்றரை மணி நேர பயண தூரத்தில் உள்ளது. தற்போது, இரண்டு நகரங்களும் முற்றிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை, தங்களது எக்ஸ் தள பக்கத்தில், "பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் மின்தடையை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அனைத்து வெளிப்புற விளக்குகளையும் அணைத்துவிட்டு, எந்த வெளிச்சமும் வெளியே செல்லாதபடி ஜன்னல்களை மூடி வைக்கவும்." என்று எச்சரித்துள்ளது.
ராஜௌரியில் தற்போதைய நிலைமை என்ன?ஜம்மு காஷ்மீரின் ராஜௌரியில் தற்போது இருக்கும் பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா, அங்கு முழுமையான மின்தடை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார்.
பூஞ்சிலும் முழுமையான மின் தடை ஏற்பட்டுள்ளது, தாக்குதல் சைரன்கள் அங்கே ஒலித்தன.
பிபிசி செய்தியாளர் திவ்யா ஆர்யா கூறுகையில், " ஜம்மு நகரத்திலும் பல வெடிப்பு சத்தங்கள் கேட்டன. இரவு 8:45 மணியளவில் ஒரே நேரத்தில் பல வெடிப்புகள் ஏற்பட்டதாக அங்குள்ள உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்," என்றார்.
மேலும், "அதன் பிறகு முழுப் பகுதிக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் வாட்ஸ்அப் அழைப்பு சேவை மட்டுமே உள்ளது. உள்ளூர்வாசிகள் மின்வெட்டுக்கு மத்தியில் வானத்தில் சிறிய விளக்குகள் தெரியும் சில காணொளிகளை அனுப்பியுள்ளனர், இதன் காரணமாக இவை டிரோன்களாக இருக்கலாம் என்று அவர்கள் யூகிக்கின்றனர்" என்று அவர் கூறினார்.
இந்த நேரத்தில் நிலைமை மிகவும் பதற்றமாக உள்ளது, மேலும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என திவ்யா ஆர்யா கூறுகிறார்.
பிபிசி பேசிய ஜம்மு நகரவாசிகளிடையே மிகுந்த பீதியும் பயமும் இருந்தது, இது சர்வதேச எல்லைக்கு அருகில் இருக்கும் ஒரு நகர்ப்புறப் பகுதி. இவ்வளவு பெரிய அளவிலான குண்டுவெடிப்புகள் இங்கு இதுவரை நிகழ்ந்ததில்லை.
'நாங்கள் தாக்கவில்லை'- பாகிஸ்தான் மறுப்புஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெறும் எந்தவொரு தாக்குதலுக்கும் பாகிஸ்தான் பொறுப்பல்ல என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார்.
"நாங்கள் இதை மறுக்கிறோம், இதுவரை எந்தத் தாக்குதலையும் நாங்கள் முன்னெடுக்கவில்லை" என்று பிபிசியிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் கூறினார்.
அவரது கூற்றுப்படி, "பாகிஸ்தான் தாக்கும்போது, அது அனைவருக்கும் தெரியும். நாங்கள் தாக்கிவிட்டு பின்னர் மறுக்க மாட்டோம்".
ஜம்மு காஷ்மீரில் வெடிப்புகள் மற்றும் மின் தடை பற்றிய செய்திகள் வெளியான சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் பிபிசியிடம் பேசினார்.
பள்ளிகள் மூடல்ஜம்மு காஷ்மீரில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் நாளை மூடப்படும் என்று ஜம்மு காஷ்மீர் கல்வி அமைச்சரின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், தர்மசாலாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
கிரிக்இன்ஃபோ வலைத்தளத்தின்படி, ஹிமாச்சலப் பிரதேசம் மாநிலத்தின் தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.
"குறிப்பிடத்தக்க தொழில்நுட்பக் கோளாறு" காரணமாக போட்டி நிறுத்தப்பட்டதாக இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு அறிக்கையில் தெரிவித்ததாக ESPN வலைத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
பார்வையாளர்கள் மைதானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட காட்சிகளை ஸ்போர்ட்ஸ்டாரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்ட காணொளி காட்டுகிறது.
இதற்கிடையே பஞ்சாப் மற்றும் டெல்லி ஐபிஎல் அணி வீரர்களை ஏற்றிச்செல்லும் சிறப்பு ரயில் நாளை பதான்கோட்டில் இருந்து டெல்லி செல்லும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக நேரம் மற்றும் வழித்தடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது எனவும் வடக்கு ரயில்வேயின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுவரை நடந்தது என்ன?ஏப்ரல் 22ஆம் தேதியன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. அந்தத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக கடந்த ஏப்ரல் 24 பொது மக்கள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "இந்தத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மோசமான தண்டனையைப் பெறுவார்கள்" என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது. பாகிஸ்தானுடனான 1960ஆம் ஆண்டு சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக நிறுத்தி வைக்க இந்தியா முடிவு செய்தது.
அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை உடனடியாக மூடவும் இந்தியா முடிவு செய்தது. பிறகு பாகிஸ்தான் விமானங்களுக்கு இந்தியா தனது வான்வெளியை மூடியது. பாகிஸ்தானிலிருந்து அனைத்து விதமான இறக்குமதிகளையும் இந்தியா தடை செய்தது.
அதேபோல பாகிஸ்தானும், இந்தியாவுக்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் செயல்படுத்தப்படும் எல்லா விமானங்களுக்கும் தன் வான்வெளியில் அனுமதி மறுத்தது.
சீக்கிய யாத்ரீகர்களைத் தவிர அனைத்து இந்தியர்களுக்கும் SAARC விசா தள்ளுபடி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட விசாக்களை நிறுத்தி வைத்த பாகிஸ்தான், அவை ரத்து செய்யப்பட்டதாகக் கருதப்பட வேண்டும் என்றது.
அதன் பிறகு, இந்தியாவுக்கு பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வந்தது.
மே 7, நள்ளிரவில் பாகிஸ்தான் மற்றும் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்தது. நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் சுமார் ஒன்பது இடங்களில் ஏவுகணை மற்றும் வான்வெளித் தாக்குதல் நடத்தப்பட்டன என்றும் ராணுவம் தெரிவித்தது.
இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதிக்கு அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தாக்குதல்களில், 57 பேர் காயம் அடைந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த தாக்குதலில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் மற்றும் நான்கு நெருங்கிய கூட்டாளிகள் கொல்லப்பட்டதாக ஐ.நா.வால் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்ட மசூத் அசார் அறிவித்தார்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், ''பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து மட்டுமே தாக்குதல்'' நடத்தப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்திருந்தார்.
மறுபுறம், பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதல்களில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 32 பேர் காயமடைந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்தது.
அதன் பிறகு, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புப் பிரிவின் அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்று வெளியானது. அதில் புதன்கிழமை இரவு முதல், பாகிஸ்தான் ராணுவம் 25 இந்திய டிரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தியா- பாகிஸ்தான் மோதல் தொடர்ந்து வந்த நிலையில், வியாழக்கிழமை இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.
இந்தியாவின் தாக்குதலில் இறந்தவர்கள் அனைவருமே பயங்கரவாதிகள்தான் என்பதை வலியுறுத்திய கூறிய மிஸ்ரி, "பாகிஸ்தான் மேற்கொண்டு தாக்கினால், பதிலடி தரப்படும்" என்று கூறினார்.
இதே கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் தெரிவித்திருந்தார்.
வியாழக்கிழமை இரவு 8:45 மணிக்கு, ஜம்மு நகரத்திலிருந்து விமானத் தாக்குதல்கள் பற்றிய தகவல்கள் வரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து, ஜம்மு நகரம் முழுவதும் மின் தடை ஏற்பட்டு, விமான சைரன்கள் ஒலித்தன.
ஜம்முவின் சத்வாரி, சம்பா, ஆர்எஸ் புரா உள்ளிட்ட பகுதிகளில் பாகிஸ்தான் 8 ஏவுகணைகளை ஏவியது என்றும், அனைத்தையும் இந்திய வான் பாதுகாப்பு பிரிவுகள் இடைமறித்தன என்றும் பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய ராணுவத்தின் கூற்றுப்படி, ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதல்களில் எந்த சேதமும் ஏற்படவில்லை எனவும் இந்திய ராணுவம் தெரிவித்தது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு