பிரபல இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் விக்ரம் சுகுமாரன். இயக்குனர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் விக்ரம் சுகுமாரன் என பல பேட்டிகளில் கூறியிருப்பார். இவர் மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான நிலையில் அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தை தொடர்ந்து ஆறு வருடங்களுக்குப் பிறகு ராவணக் கோட்டம் என்ற திரைப்படத்தை நடிகர் சாந்தனுவை வைத்து இயக்கினார். இந்த படமும் பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் நேற்று ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு பேருந்தில் விக்ரம் சுகுமாரன் சென்று கொண்டிருந்தார்.
அவர் பேருந்தில் செல்லும்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதிலும் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டார். அவரது உடல் தற்போது சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவரது மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.