இந்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டனரா? - வெளியுறவு அமைச்சகம் பதில்
BBC Tamil May 09, 2025 11:48 AM

இந்தியா- பாகிஸ்தான் மோதல் தொடர்பாக, வியாழக்கிழமை (மே 8) அன்று இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, விங் கமாண்டர் வ்யோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி, செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தனர்.

அப்போது பேசிய விக்ரம் மிஸ்ரி, "மே 7ஆம் தேதி நடத்தப்பட்ட தாக்குதலில் பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்ற கூற்று பற்றி பேச விரும்புகிறேன். நாங்கள் தெளிவாக கூறிவிட்டோம். மே 7ஆம் தேதி தாக்குதலுக்காக பயங்கரவாத இலக்குகள் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டன. நேற்று நடந்த தீவிரவாதிகளுக்கான இறுதிச்சடங்கு உட்பட தாக்குதலுக்கு பிந்தைய சில காணொளிகளை பார்த்தோம்.

உங்களில் பலர் காணொளிகளையும் பதிவுகளை ஊடகங்களில் பார்த்திருப்பீர்கள். பொதுமக்கள் மட்டுமே கொல்லப்பட்டார்கள் என்றால் இந்த புகைப்படம் உணர்த்துவது என்ன? இந்த கேள்வி கேட்கப்பட வேண்டும். பொதுமக்களின் இறுதிச்சடங்கு பாகிஸ்தான் கொடியுடன் கூடிய சவப்பெட்டியுடனும் தேசிய மரியாதையுடன் நடப்பது என்பது விசித்திரமாக இருக்கிறது." என்று கூறினார்.

மேலும், "எங்களைப் பொருத்தவரை கொல்லப்பட்ட தனிநபர்கள் தீவிரவாதிகள். தீவிரவாதிகளின் இறுதிச் சடங்கில் தேசிய மரியாதை கொடுப்பது என்பது பாகிஸ்தானில் வழக்கமாக இருக்கலாம். எங்களுக்கு தான் புரியவில்லை போலும்." என்று அவர் கூறினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.