பாகிஸ்தான் மீது அடுத்த ஆக்ஷன்... இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம்!
Dinamaalai May 14, 2025 05:48 PM

ஆபரேஷன் சிந்தூர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தான் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை, பொருளாதார தடை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்திய ராணுவம் 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதல் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்த நிலையில், எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்தது. இந்த தாக்குதல் முயற்சிகளை இந்திய ராணுவம் தொடர்ந்து முறியடித்து வந்தது.

இந்நிலையில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு இந்தியாவும், பாகிஸ்தானும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த 10ம் தேதி அறிவித்தார். இதை இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் உறுதி செய்தன.

இந்நிலையில் பிரதமர் மோடி பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. 

டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளது. கூட்டத்தில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளிவருவத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் விவகாரம் தொடர்பான கொள்கை முடிவுகள், பொருளாதார தடைகள், ராணுவ நடவடிக்கைகள் ஆகியவை தொடர்பாகவும் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை தற்காலிகமாகவே நிறுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி கூறியிருந்த நிலையில் இந்த அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.