தேனி மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி 18 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த சுருளிச்சாமி, நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்றிரவு டி.கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றுக் கொண்டிருந்த மாடுகளை சாலையில் வேகமாக வந்துக் கொண்டிருந்த அரசுப் பேருந்து பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 18 மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. 20க்கும் மேற்பட்ட மாடுகள் காயம் அடைந்தன. மாடுகள் மீது மோதியதால் அரசு பேருந்தின் முன்பகுதி பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாலையில் இருந்து உயிரிழந்த மாடுகளை அப்புறப்படுத்தினர். இதனால் பைபாஸ் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அரசுப் பேருந்து ஓட்டுநர் அழகர்சாமி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.