அதிகாலையில் அதிர்ச்சி... ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 பேர் உடல் கருகி பலி!
Dinamaalai May 15, 2025 09:48 PM

லக்னோ நகரில் இன்று காலை ஒரு பயணிகள் பேருந்தில்  பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் இரு குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் உயிரிழந்ததாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த  பேருந்து பீகாரிலிருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தபோது, லக்னோவின் மோஹன்லால்கஞ்ச் அருகே உள்ள கிசான் பாதையில் காலை 5 மணிக்கு  திடீரென தீப்பற்றியது. அந்த நேரத்தில் பெரும்பாலான பயணிகள் தூங்கிக்கொண்டிருந்தனர். இதனையடுத்து தீப்பற்றிய  புகை பேருந்து முழுவதும் பரவ ஆரம்பித்தது.

தீவிபத்து ஏற்பட்டவுடன் ஓட்டுநர் ஒரு ஜன்னலை உடைத்து வெளியே குதித்து தப்பி ஓடிவிட்டார். பேருந்திலிருந்து வெளியேறும் வழியில் ஓட்டுநரின் அருகில் கூடுதல் இருக்கை ஒன்று பொருத்தப்பட்டிருந்ததால்  அவசர வெளியேறும் கதவும் திறக்காமலிருந்ததாலும், பயணிகள் சிக்கிக் கொண்டு தப்பிக்க முடியாமல் தவித்தனர். இதில் பலர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.  
தீ பற்றிய செய்தி கிடைத்ததும், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்  போலீசாருக்கும், தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் அளித்தனர். தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்களில் தீயை கட்டுப்படுத்தினர். இருந்தாலும், வெறும் 10 நிமிடங்களுக்குள் பேருந்து முழுவதுமாக கருகி சாம்பலாகி போனது. இச்சம்பவம் குறித்து  போலீசார் ஆரம்பகட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.