இது தெரியுமா ? மாத்திரை மருந்துகள் உட்கொள்ளும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள்..!
Newstm Tamil May 16, 2025 01:48 PM

உடல்நலம் குறித்த அக்கறையோடு பார்த்துப் பார்த்து காய்கறிகளைத் தேர்ந்தெடுத்து, அளவு பார்த்துச் சாப்பிடுகிறவர்களும் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்களேகூட ஒரு விஷயத்தில் கோட்டை விட்டுவிடுவார்கள். அது, மாத்திரை, மருந்துகள் சாப்பிடும் தருணம். `இவற்றில் சிலவற்றை உட்கொள்ளும்போது, சில உணவுகளைச் சாப்பிடக் கூடாது. அப்படிச் சாப்பிடும்போது, மாத்திரை, மருந்தின் தன்மை பாதிக்கப்படும்; அவற்றின் பணி தடைப்படும்; சில நேரங்களில் நோய்க்கு மருந்தாவதற்கு பதிலாக, ஆபத்தான விளைவுகளையும் ஏற்படுத்திவிடும்.  


அதேபோல காபி, குளிர்ப்பானங்களைக்கூட மாத்திரை சாப்பிடும் நேரத்தில் அருந்தக் கூடாது. அதனால், மாத்திரை பயனற்றதாகிவிடும்; சில நேரங்களில் பக்கவிளைவுகள் ஏற்படும்’ என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். அப்படி, எந்தெந்த உணவுகளுடன் எந்தெந்த மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது 

சிலர் மருந்து சாப்பிடும் போது அல்லது மருந்து சாப்பிட்ட பிறகு தேநீர் அல்லது காபி குடிப்பார்கள். அவ்வாறு செய்வது தவறு. மருந்தை உட்கொள்ளும் போது அல்லது உட்கொண்ட உடனேயே தேநீர் அல்லது காபி குடிப்பது மருந்தின் ஆற்றலை அல்லது விளைவைக் குறைக்கலாம். தேநீர் மற்றும் காபி இரண்டிலும் காஃபின் உள்ளது. இது சில மருந்துகளை உடல் உறிஞ்சும் திறனை பாதிக்கலாம். இது தவிர, வயிற்றில் அமிலத்தை அதிகரிப்பதன் மூலம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகளையும் அதிகரிக்கும். எனவே, மருந்தை உட்கொண்ட பிறகு குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தான் தேநீர் அல்லது காபி குடிக்க வேண்டும்.

பாலுடன் மருந்து சாப்பிடும் வழக்கம்

பாலுடன் மருந்து உட்கொள்வது அதிக நன்மை பயக்கும் என்பது மிகவும் தவறான எண்ணம். பால் உடலுக்கு வலிமை தருவதால், மருந்தும் பாலும் சேர்ந்து உடலுக்கு நன்னமை பயக்கும் என நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், எல்லா மருந்தையும் பாலுடன் எடுத்துக்கொள்ள முடியாது. சில மருந்துகள் பாலுடன் வினைபுரிந்து, மருந்தின் செயல்திறனை பாதிக்கக்கூடும். எனவே, மருத்துவர் உங்களிடம் குறிப்பிட்டு சொன்னாலன்றி, பாலுடன் மருந்து உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

பலர் ஒரு வேளை மருந்து சாப்பிட மறந்துவிட்டால், அடுத்த முறை இரண்டு மாத்திரைகளாக எடுத்துக் கொண்டால், பரவாயில்லை என்று நினைக்கிறார்கள். இது அப்படியல்ல. ஒரே நேரத்தில் இரண்டு டோஸ் மருந்தை உட்கொள்ளும்போது, அது அதிகப்படியான மருந்தாக வேலை செய்யும். இது மிகவும் ஆபத்தானது. குறிப்பாக கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களில் இது மிகவும் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. நீங்கள் ஒரு வேளை மருந்து எடுத்துக் கொள்ள தவறவிட்டிருந்தால், மருத்துவரை அணுகி, என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை பெறவும்.

வலி நிவாரணி மருந்துகள் - குளிர்ப்பானங்கள் : 


தலைவலி, தசைபிடிப்பு,  தசை வீக்கத்துக்காக உட்கொள்ளும் மருந்தை உட்கொள்ளும்போது, கண்டிப்பாக சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்ப்பானங்களைத் தவிர்க்க வேண்டும். இவற்றில் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் அமிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், மருந்தை உடல் உறிஞ்சுக்கொள்ளும் தன்மையைப் பாதிக்கும். மேலும், நச்சுச்தன்மை அதிகம் இருப்பதால், சிறுநீரகத்தையும் பாதிக்கக்கூடும்.

நம்மில் பெரும்பாலோர் மருந்து சாப்பிட்ட பிறகு உடனேயே படுத்துக் கொள்கிறோம் அல்லது நேராக தூங்கச் செல்கிறோம். ஒருவருக்கு காய்ச்சல் அல்லது வலி இருக்கும்போது வேறு என்ன செய்ய முடியும் என கேட்கலாம். ஆனால் சிறிது நேரம் நேராக உட்கார முடிந்தால், மருந்து எடுத்துக் கொண்ட பிறகு படுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், இதனால், சில மருந்துகள் ஆசிடிட்டி, வாயு அல்லது வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். அதிலும், செரிமான நோய்களால் அவதிப்படுபவர்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.


ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் நுரையீரல் பிரச்னைக்கு  மருந்துகளை உட்கொள்ளும்போது, குளிர்ப்பானங்களை குடிக்கக் கூடாது. இவற்றில் உள்ள 'காஃபின்' நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடியது. 


சிறுநீரகக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் போது மாத்திரைகளுடன் வாழைப்பழம், சோயா, தக்காளி, கீரைகளைச் சாப்பிடக்கூடாது.  இவற்றில் பொட்டாசியம் அதிகம் என்பதால், ரத்தத்தில் பொட்டாசியம் அதிகரித்து பாதிப்பை ஏற்படுத்திவிடும். மருத்துவர் ஆலோசனையுடன் மருந்துகளை உட்கொள்வது நல்லது.


கொழுப்பைக் குறைப்பதற்கு உட்கொள்ளும் மருந்துகளுடன் திராட்சைப்பழ ஜூஸ் சாப்பிடக் கூடாது; சிட்ரஸ் பழங்களைத் தவிர்ப்பது நல்லது. 

தைராய்டு பிரச்னைகளுக்காக உட்கொள்ளும் உணவுகளுடன் சோயா மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடல் மருந்தை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையை பாதிக்கும்.


ரத்தம் உறைதல் போன்ற ரத்தம் தொடர்பான நோய் மருந்துகளை உட்கொள்ளும்போது, பூண்டு, இஞ்சி மற்றும் சில மசாலாப்  பொருள்கள்  (சிவப்பு மிளகு, பட்டை, மஞ்சள்) சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணக் கூடாது. அதேபோல வைட்டமின் கே சத்துள்ள கீரை, முட்டைக்கோஸ் மற்றும் புரோக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளக் கூடாது. இவை மருந்தின் வீரியத்தை குறைத்துவிடும். 

பொதுவாக நோய்க்காக மருந்து, மாத்திரைகள் உட்கொள்ளும்போது, சாப்பிடக் கூடாதவை...

* பழச்சாறு, சோடா கலந்த பானம், காஃபின் கலந்த குளிர்பானத்துடன் மாத்திரை சாப்பிடுவதைத் தவிர்த்து, தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும்.

* மருந்து, மாத்திரை உட்கொள்ளும்போது, மது அல்லது புகை பிடித்தல் கூடவே கூடாது.

*  மருந்தை, உணவு சாப்பிடும் முன்னர் சாப்பிட வேண்டுமா அல்லது உணவுக்கு பிறகு சாப்பிட வேண்டுமா என்பது குறித்த மருத்துவர்களின் அறிவுரைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.