கர்நாடக மாநிலம் பாகல்கோட் மாவட்டத்தின் ஜம்கண்டி பகுதியில் திருமண மண்டபத்தில் மணமகள் கழுத்தில் மங்களசூத்திரம் கட்டிய 15 நிமிடங்களிலேயே மணமகன் மாரடைப்பால் உயிரிழந்தார்.
கர்நாடக சைக்கிள் ஓட்டுதல் சங்கத்தின் மாநில செயலாளராக பணியாற்றும் ஸ்ரீஷைல் குர்னேயின் மகனான 26 வயதுடைய பிரவீன் குர்னே, ஒரு தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார்.
பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த அவரது உறவுப் பெண்ணை மணந்த பிரவீன், திருமண மண்டபத்தில் “ஆர்தக்ஷதே” சடங்கின்போது திடீரென நெஞ்சு வலிப்பதாக கூறி மேடையில் சாய்ந்தார்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு, வரும் போதே உயிரிழந்துள்ளதாக மருத்தவர்கள் தெரிவித்தனர். மணமகள் மங்களசூத்திரம் கட்டிய 15 நிமிடங்களிலேயே விதவையாக ஆன இந்த நிகழ்வு, விருந்தினர்களிடையே பெரும் அதிர்ச்சி மற்றும் துயரத்தை ஏற்படுத்தியது.
பெரிய விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில், மண்டபத்தில் இருந்த அனைத்து அலங்காரங்களும், உணவுப் பொருட்களும் உடனடியாக அகற்றப்பட்டன. மகிழ்ச்சியாக தொடங்கிய அந்த நாள், குடும்பத்தினருக்கும் மணமகளுக்கும் தாங்க முடியாத துயர நாளாக மாறியது.
“இப்படி யாருக்கும் நடக்கக்கூடாது” என்று விருந்தினர்கள் கூறியதோடு, இது போன்ற துயரச் சம்பவம் அனைவரையும் கலங்க வைத்துள்ளது. தற்போது பிரவீனின் இறுதிச்சடங்குகள் நடைபெற்று வருகின்றன.