தன்னைக் காதலித்து விட்டு, ஏமாற்றி இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்த காதலனை பழிவாக்கும் விதமாக, சொந்த பந்தங்களையும், நண்பர்களையும் அழைத்து கோலாகலமாக திருமண வரவேற்பு நிகழ்வை நடத்திக் கொண்டிருக்கும் போது, திடீரென மேடையேறிய இளம்பெண் ஒருவர், மணமகனைத் துவைத்தெடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. ‘என்னை ஏமாத்திட்டு இன்னொருத்தியோட கல்யாணமா என்று கதறியபடியே மணமகனைத் துவைத்து வெளுக்கிறார் அந்த இளம்பெண்.
ஒடிசா தலைநகரில் விமரிசையாக நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் திடீர் கலாட்டா அரங்கேறியது. அதன்படி மணமகன் தன்னுடைய லவ்வர் என்றும், ஏற்கனவே பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து தன்னை அவர் ஏமாற்றியதாகவும் இளம்பெண் ஒருவர் காவல்துறையினரையும் திருமணத்திற்கு அழைத்து வந்து கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புவனேஸ்வரில் உள்ள கல்யாண மண்டபத்தில் மணமக்களின் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு வந்த பெண் ஒருவர் ரிசப்ஷனில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து கொண்டிருந்த மாப்பிள்ளை மீது சராமாரியாக தாக்குதல் நடத்தினார்.
மேலும் அவர் 2021 லிருந்து காதலித்து, 2024 ல் இருவருக்கும் பெரியவர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறினார். மேலும் தன்னிடம் இருந்து அவர் 5 லட்சம் ரூபாய் வாங்கிவிட்டு ஏமாற்றியதாகவும் குற்றம் சாட்டினார். இது அங்குள்ள விருந்தினர்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து காவல்துறையினர் மணமகனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.