தூத்துக்குடி மாவட்டத்தில், நாளை காலை திருமணம் நடக்க இருந்த நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், திருமண விழாவில் கலந்துக் கொள்ள திரண்டிருந்த உறவினர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து போலீசார் கூறுகையில், “தூத்துக்குடி அருகே உள்ள புதியம்புத்தூர், மேலமடம், கீழத் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் சரண்யா (23). இவர் பசுவந்தனை அருகேயுள்ள போடிநாயக்கனூரில் மக்கள் நல பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு தாய் - தந்தை இல்லாததால் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தார் . இந்நிலையில், சரண்யா அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்ததாக தெரிகிறது. ஆனால் அவரது அக்கா, வேறு ஒருவருடன் திருமணம் பேசி முடித்துள்ளார். நாளை மே 25ம் தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில் இவர்களது காதல் விவரத்தில் நேற்று தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சரண்யா நேற்றிரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்
கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.