கோவை மாவட்டத்தில் வெள்ளியங்கிரி மலையில் ஏற தடை விதிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில் ஏறுபவர்கள் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. இதற்காகவே வனத்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதய பிரச்சனை இருப்பவர்கள் , இணை நோய் பாதிப்புகள் உள்ள மலை ஏற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வெள்ளியங்கிரி மலையில் ஏறுவதற்கு தடை விதிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏழு மலைகளைக் கொண்ட வெள்ளியங்கிரியில் ஒவ்வொரு மலையும் ஒவ்வொரு சூழ்நிலையை கொண்டது. எனவே மலையேற்றம் என்பது கடினமானது என அங்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தல் கொடுத்து வருகின்றனர்.
இருப்பினும் வார இறுதி நாட்களில் அதிக அளவில் மக்கள் மலையேறி வருகின்றனர். இன்று 3 பெண்கள் வெள்ளிங்கிரி மலை ஏற்றத்திற்கு சென்ற நிலையில் 2 பேர் திரும்பி விட்டனர். 3 வது பெண் ஒருவர் ஆக்சிஜன் அளவு கம்மியாக இருந்ததால் உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உயிரிழந்த பெண்ணின் பெயர் கவுசல்யா என்பதும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. அதேபோல் 5 வது மலையில் ஒருவர் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவரை கீழே கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் வனத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.