19 வயது கல்லூரி மாணவி தற்கொலை..! தற்கொலை கடிதம் சிக்கியது..!
Newstm Tamil May 30, 2025 12:48 PM

கர்நாடக  ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த மஹந்தப்பா என்பவரது மகள் தேஜஸ்வினி. கடந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு முடித்த இவர், குடகு மாவட்டம் பொன்னம்பேடு பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மற்றும் இயந்திர கற்றல் பிரிவை எடுத்து பயின்று வந்தார்.
 

சக மாணவர்களுடன் ஜாலியாக பேசி வந்த தேஜஸ்வினி, மூன்று நாளைக்கு முன்பு தான் தனது 19-வது பிறந்த நாளை மாணவர்களுடன் கொண்டாடினார். இதையொட்டி மாணவர்கள் ஏற்பாட்டின் பேரில் தேஜஸ்வினி கேக் வெட்டினார். அதை தனது நண்பர்களுக்கும், தோழிகளுக்கும் ஊட்டி மகிழ்ந்தார்.

மேலும் தனது பிறந்த நாள் விழாவில் பங்கேற்க இயலாத நண்பர்களுக்கும் நேற்று இனிப்புகளை வழங்கி தேஜஸ்வினி வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார். பலரும் அவரை வாழ்த்தினர். இந்த நிலையில் நண்பர்களுடன் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு, மாலை 4 மணியளவில் விடுதி அறைக்கு தேஜஸ்வினி சென்றார்.சிறிது நேரம் கழித்து தோழிகள் அவரை அழைத்த போது எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை. தேஜஸ்வினியின் அறைக் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. தோழிகள் கதவை தட்டியும் அவர் பதிலளிக்கவில்லை. கைபேசியில் அழைத்த போதிலும் பதில் கிடைக்கவில்லை.


இதனால் செய்வது அறியாது திகைத்த தேஜஸ்வினி தோழிகள், உடனடியாக விடுதி வார்டனுக்கு தகவல் கொடுத்தனர். இதன் பேரில் வார்டன் அங்கு வந்து கூப்பிட்டு பார்த்தார். அதற்கும் தேஜஸ்வினி பதில் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதை அடுத்து பொன்னம்பேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்து தேஜஸ்வினி தங்கியிருந்த விடுதி அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.

அதாவது தேஜஸ்வினி மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை பார்த்து தோழிகள் கதறி அழுதனர். இது காண்பவர்களை கண்கலங்க செய்தது. பின்னர் அவரது சடலத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, தேஜஸ்வினி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக ராய்ச்சூரில் இருக்கும் அவரது பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன் பேரில் அவரது பெற்றோர் குடகு மாவட்ட மருத்துவமனைக்கு வந்தனர். மேலும், தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக தேஜஸ்வினி எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று போலீசாரிடம் சிக்கியது.

அதில் தன்னால் படிக்க முடியாததாலும், விரக்தியின் காரணமாகவும் இந்த விபரீத முடிவை எடுத்துக் கொண்டதாக தேஜஸ்வினி கூறியுள்ளார். அதாவது ஏற்கனவே அவருக்கு ஆறு ஆரியர் இருந்ததாகவும், மேலும் பாடம் மிகவும் கடினமாக இருந்ததால், அதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றும் தேஜஸ்வினி அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

அத்துடன் மேற்கொண்டு படிக்க விருப்பம் இல்லாததால், இந்த விபரீத முடிவைத் தேடிக் கொண்டதாகவும் அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தேஜஸ்வினியின் பெற்றோருக்கு அவர் ஒரே மகள் ஆவார். மருத்துவமனையில் அவர் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது காண்போரின் நெஞ்சத்தை கண் கலங்கச் செய்தது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.