அடுத்தடுத்து திமுக அரசுக்கு சிக்கல்கள் வந்துக் கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்னால் இஷ்டத்துக்கு வாக்குறுதி கொடுத்துவிட்டு, ஆட்சியைப் பிடித்ததும் எதையுமே செய்யலை என்று மக்கள் புலம்புகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டம், நீட் தேர்வு ரத்து, மாதந்தோறும் மின் கட்டணம், பால் விலை குறைப்பு, சிலிண்டர் விலை குறைப்பு, பெட்ரோல் விலை குறைப்பு என்று வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதிகளாக கொடுத்து விட்டு, மகனுக்கு அமைச்சர், துணை முதலமைச்சர் என்று பதவி கொடுத்து அழகு பார்த்து வருகிறார் ஸ்டாலின் என்று எதிர்கட்சிகள் புலம்புகின்றனர்.
இந்நிலையில் தமிழக மக்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக விரைவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து போக்குவரத்து துறை கருத்துக்கணிப்பில் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழகத்தை பொறுத்தவரை 2018ல் கடைசியாக பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு வருகிறது. இது குறித்து தங்களது மேலான கருத்துக்களை சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ தெரிவிக்கலாம் என போக்குவரத்து துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
டீசல் விலை ஏற்றத்தால் அரசு போக்குவரத்து கழகம் பெரும் இழப்பை சந்தித்து வரும் நிலையில், நிதி ஆதாரத்தை திரட்ட ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்காத வகையில் போக்குவரத்து கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.