QR கோட் மூலம் பணம் வசூலிக்கும் அன்புமணி... ஆடிட்டர் மூலம் கடிவாளம் போடும் ராமதாஸ்!!
Top Tamil News June 01, 2025 06:48 PM

பாமகவில் உச்சக்கட்ட மோதல் நடந்து கொண்டிருக்கும் நிலையில், கட்சிக்கு நிதி வழங்குங்கள் என்று க்யூ ஆர் கோட் அறிமுகம் செய்துள்ளார் அன்புமணி.


சென்னையில் சோழிங்கநல்லூரில் உள்ள திருமண மண்டபத்தில் பாமகவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாமகவின் தலைவர் அன்புமணி, ராமதாஸ் தான் எங்களின் குலசாமி.. அவரின் வழிகாட்டுதலிலும், கொள்கைகளிலும் பயணித்து பாமகவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வோம் என்று தெரிவித்தார்.


இதன் மூலமாக பாமகவில் உள்ள ராமதாஸின் அதிகாரம் குறைக்கப்பட்டு, கட்சியை அன்புமணி கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே பாமகவின் உறுப்பினர் சேர்க்கையை கட்சி நிர்வாகிகள் முன்னெடுக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான உறுப்பினர் அட்டைகளை புதிதாகவும் அறிமுகம் செய்துள்ளார்.அந்த உறுப்பினர் அட்டை க்யூ ஆர் கோடுடன் கூடியதாக இருக்கிறது. அந்த க்யூ ஆர் கோடு மூலமாக பாமகவிற்கு பொதுமக்கள் நன்கொடை கொடுக்கலாம் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் பாமக ஆலோசனை கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாக அன்புமணி பேசிய சம்பவம் பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


அதில் அன்புமணி பேசுகையில், கடந்த காலத்தில் நிறைய பார்த்துவிட்டேன். ஒரு தொகுதியில் பாமகவுக்கு 1.5 லட்சம் உறுப்பினர்கள். ஆனால் தேர்தலில் நாம் பெற்ற வாக்குகளே 65 ஆயிரம் தான். அப்போது ஒரு உறுப்பினர் அட்டையில் உள்ள நம்பருக்கு போன் பண்ணினால், அந்த போன் பீகாருக்கு போகிறது.. அதுமாதிரி செய்யாதீர்கள். எனக்கு குறைவாக இருந்தாலும், உண்மையான உறுப்பினர்கள் வேண்டும்.


எண்ணிக்கை, போட்டி என்பதெல்லாம் தேவையில்லை. அதிக உறுப்பினர்களை சேர்த்தால், மோதிரம், செயின் எல்லாம் போடுவேன் என்று சொல்ல மாட்டேன். உங்களின் மனசாட்சிக்கு தெரியும். இதில் போட்டி கிடையாது. நம்ம கட்சி, நம்ம எதிர்காலம் என்று பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகிகள் பணிகளை அனைவருக்கும் கொடுத்து பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதே வேளையில்ஆடிட்டருடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறும் ராமதாஸ். கட்சியின் நிதி விவகாரத்தை கையிலெடுக்கும் முயற்சியில உள்ளார்.

 ஏற்கனவே கட்சி நிதி விவகாரங்களை ராமதாஸ் தான் கவனித்து வந்தார். தற்போது அன்புமணி நிதி வசூலிப்பதை தடுக்கவே ராமதாஸ் ஆடிட்டருடன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அன்புமணியுடன் மோதல் முற்றிய நிலையில் ஆடிட்டருடன் ராமதாஸ் நடத்திய இந்த ஆலோசனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.