பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. மொத்தமாக அங்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள், 'தியாகத் திருநாள்' என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகையை வருகிற ஜூன் 7-ந் தேதி கொண்டாடுகிறார்கள். கடந்த மாதம் 28-ந் தேதி வானில் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து, பக்ரீத் பண்டிகை 7-ந் தேதிகொண்டாடப்படும் என்று தமிழக அரசின் தலைமை காஜி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாநகராட்சி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. மொத்தமாக அங்கு சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.மணப்பாறை, திருச்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்பட்ட10 முதல் 20 கிலோ எடையுள்ள ஆடுகளை, ஏராளமான இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் வாங்கிச் சென்றனர்.
இதே போல் திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டி வாரச்சந்தையில் ஒரே நாளில் 1 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின.அதே போன்று ஒரு கிடா ஆடு 15 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்பட்டது. மேலும் வழக்கத்தை விட அதிகமாக ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.