இந்தியாவிற்கு 03 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக பராகுவே நாட்டின் அதிபர் சான்டியாகோ பெனா பலாசியோஸ் மேற்கொண்டுள்ளார். இந்தியாவில் டெல்லி, மும்பை நகரங்களில் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்காக இன்று இந்தியாவில் டெல்லி பாலம் விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை மத்திய இணை அமைச்சர் ஹர்ஷ வர்தன் மல்கோத்ரா நேரில் சென்று வரவேற்றார்கள்.
பின்னர் அவருக்கு ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து பிரதமர் மோடியை நேரில் சந்தித்து அவர் இருதரப்பு உறவுகள் பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், டெல்லி ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பராகுவே ஜனாதிபதி சான்டியாகோ பெனாவை வரவேற்றுள்ளார். அதன் பின், ஜனாதிபதி மாளிகையில் சான்டியாகோவுக்கு கௌரவமளிக்கும் வகையில், சிறப்பான முறையில் விருந்து வழங்கப்பட்டது.
அதன் தொடர்ந்து ஜனாதிபதி முர்மு உரையாற்றும்போது, இது ஒரு வரலாற்று தருணம். 1961-ஆம் ஆண்டு நம்முடைய 02 நாடுகளுக்கும் இடையே தூதரக அளவிலான உறவுகள் ஏற்படுத்தப்பட்டது. அப்போதில் இருந்து, நம்முடைய இரண்டு நாடுகளும் பரஸ்பர நம்பிக்கை, ஜனநாயக மதிப்புகள் அடிப்படையில் இனிய மற்றும் நட்புரீதியிலான இருதரப்பு உறவுகளை பகிர்ந்து கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நம்முடைய மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக, பகிரப்பட்ட உள்ளார்ந்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன என முர்மு பேசியுள்ளார்.