கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டம், கல்லரா என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர், நடிகை ராதா. குஞ்சன் நாயர் - சரசும்மா தம்பதியினருக்கு மூன்றாவது பெண் குழந்தையாக 1965ஆம் ஆண்டு, ஜுன் 3ஆம் தேதி பிறந்தார். இவரது மூத்த சகோதரி அம்பிகா, தமிழ் உட்பட பல்வேறு தென்னிந்திய மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர். அதனால் வீட்டிலேயே தனக்கு திரைத்துறையில் ஒரு போட்டியாளரோடு மோதிக்கொண்டிருந்தார், நடிகை ராதா
தமிழ் சினிமா என்னும் கனவுப் பட்டறையில் பலருக்கும் நுழைய வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கும்போது, இயக்குநர் இமயம் பாரதிராஜாவால் தேடி கண்டெடுக்கப்பட்டு, வெள்ளித்திரையில் அறிமுகப்படுத்தப்பட்டவர் தான், நடிகை ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' என்னும் திரைப்படத்தில் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணும், ஒரு இந்து ஏழை பிராமண வகுப்பைச் சேர்ந்த இளைஞரும் காதல் வயப்படுவர். அதில் இருவரும் உறுதியாக நின்று, மதத்தைவிட பெருங்காதல் புனிதமானது என, திருமண பந்தத்தை நோக்கி நகர்வர். அதில் கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாக மேரி என்னும் கதாபாத்திரத்தில், முதல் படத்திலேயே தடம்பதித்தார், நடிகை ராதா. இன்றும் அந்த மேரியையும் விச்சுவையும் உதாரணமாகக்கொண்டு, மதங்கள் தாண்டி திருமணம் செய்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் தம்பதிகள் பலர்.
கர்ப்பிணியாக இருக்கும் இன்னொருவரின் காதலியை, குடும்பத்தினரின் மானம் காக்க மணம் புரிந்துகொள்ளும் கதாநாயகன் மலைச்சாமி. அவருக்கு 60 வயதை நெருங்கும்வேளையில் தனது மகளை ஒத்த பெண்ணுடன் காதல் மலர்கிறது. அவர்மேல் காதல் கொள்ளும் அப்பெண்ணும் ஊராரின் திட்டுக்களை எல்லாம் ஏற்று அவருடைய குடும்ப மானம் காக்கக் கொலை செய்து சிறை செல்கின்றாள். அவளுக்கு இழுக்கு வராதவண்ணம் அப்பெண்ணின் வீட்டிலேயே வாழ்ந்து தன் இறுதிக்காலத்தில், அவளை மீண்டும் பார்த்தபின் உயிர் துறக்கின்றார். இதில் மலைச்சாமியாக நடிகர் சிவாஜி கணேசன் நடிக்க, 'குயிலு' என்னும் கதாபாத்திரத்தில் வாழ்ந்து இருப்பார், ராதா.
இப்படி வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே, கோபுரங்கள் சாய்வதில்லை, மெல்லத் திறந்தது கதவு, இதயக்கோயில், ஜல்லிக்கட்டு, ஜப்பானில் கல்யாணராமன், சின்னப்பதாஸ் உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப்படங்களில் வெற்றிகொடிநாட்டிய ராதா, 1991ஆம் ஆண்டு ராஜசேகரன் நாயர் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு, சிறிது காலம் சினிமாவிற்கு இடைவெளிவிட்டுவிட்டு, சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்கெடுக்கத்தொடங்கினார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் தொடர்ந்து இடைவிடாது நடித்து 1980களின் காதல் கன்னியாகத் திகழ்ந்த நடிகை ராதாவுக்கு இன்று 61ஆவது பிறந்தநாள்...