ஆக்ரா: ”ரீல்ஸ் பண்ணிட்டு இருந்தாங்க...” - யமுனை நதியில் மூழ்கி பலியான 6 பெண்கள்!
Vikatan June 05, 2025 06:48 AM

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரையில் குளிக்கச் சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்ராவின் சிக்கந்த்ரா காவல் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், முழு கிராமத்தையும் துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ஆரம்பத்தில் ஆற்றங்கரை அருகே விளையாடி, செல்போனில் வீடியோக்கள் பதிவு செய்வதை கண்டதாகவும் பின்னர் ஆழமான பகுதிக்கு சென்ற போது அவர்களை தண்ணீர் அடித்துச் சென்றதாகவும் கூறினர்.

யமுனா ஆற்றங்கரைக்கு அருகே உள்ள பண்ணையில் வேலை செய்து கொண்டிருக்கும்போது சற்று இளைப்பாற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் ஆற்றங்கரைக்கு சென்று குளித்துள்ளனர். அப்போதுதான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.

ஆறு பேரும் ஒரே பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமத்தில் வசிப்பவர்கள்.

இந்த சம்பவம் குறித்த தகவல் விரைவாக பரவ கிராமத்தில் உள்ள உள்ளூர்வாசிகள் ஆற்றங்கரைக்கு விரைந்து வந்து பார்த்துள்ளனர். உள்ளூர்வாசிகள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

மாவட்ட நிர்வாகம் உட்பட மூத்த அதிகாரிகள் உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது ஆறு பேரும் நீரில் மூழ்கி இறந்ததாக அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.