#image_title
Jananayagan: நடிகர் விஜய் இப்போது ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடிக்கும்போதே அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்து கட்சி பெயரையும் அறிவித்தார். மேலும், கோட் படத்தில் நடித்து முடித்துவிட்டு விழுப்புரம் விக்கிரவாண்டி பகுதியில் மாநாட்டையும் நடத்தி முடித்தார்.
அதோடு ஆளும் திமுகவிற்கு எதிராக தொடர்ந்து அறிக்கைகளையும் விட்டு வருகிறார். அதேநேரம் அவர் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் பற்றி அதிகம் விமர்சிப்பது இல்லை. மேலும், பனையூரில் இருந்து மட்டுமே அவர் அரசியல் செய்து வருகிறார். பனையூர் அரசியல்வாதி எனவும் பாஜக, திமுக போன்ற கட்சிகள் விமர்சனம் செய்தன.
ஒருபக்கம் ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்கிற படத்திலும் விஜய் நடிக்க துவங்கினார். இதுதான் விஜயின் கடைசிப்படம் என்றே கணிக்கப்படுகிறது. ஏனெனில், இந்த படத்திற்கு பின் விஜய் முழுநேர அரசியல்வாதியாக மாறவிருக்கிறார் எனவும், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு 2 நாட்களுக்கு முன்பு முடிந்து விஜய்க்கு பிரிவு உபச்சார விழா நடத்தி அனுப்பிவிட்டார்கள். படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போதும் நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏனெனில், வழக்கமாக விஜய் ஆடியோ லான்ச்சில் அரசியல் பேசுவார். இப்போது அரசியல்வாதி ஆகிவிட்ட நிலையில் அவர் என்ன பேசுவார் என்கிற எதிர்பார்ப்பு அவரின் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
வழக்கமாக விஜய் பட விழாவில் அவரின் ரசிகர்கள் மற்றும் படத்தில் வேலை செய்தவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். ஆனால், விஜய் அரசியலுக்குவந்துவிட்ட நிலையில் பொதுமக்களும் இதில் கலந்துகொள்ளவேண்டும் என விஜய் ஆசைப்படுவதாக சொல்லப்படுகிறது. அதற்காக ஆன்லைனில் டிக்கெட்டை இலவசமாக கொடுக்கும் திட்டமும் இருக்கிறதாம்.
அதேநேரம் விஜயை பிடிக்காதவர்கள் மற்றும் விஜயை பிடிக்காத அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் இந்த டிக்கெட்டை வாங்கி நிகழ்ச்சிக்கு வந்து ஏழரையை இழுக்கும் ஆபத்து இருக்கிறது. மேலும், நிறைய டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்டு நிகழ்ச்சிக்கு வராமல் போய் கூட்டம் இல்லை என்பது போன்ற இமேஜை உருவாக்கவும் சிலர் முயற்சி செய்வார்கள். எனவே, இதை எப்படி திட்டமிடுவார்கள் என்பது தெரியவில்லை.