பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக இருந்தவர் விக்ரம் சுகுமாரன். வெற்றிமாறனின் நெருங்கிய நண்பரான இவர் வெற்றிமாறன் இயக்கிய ‘பொல்லாதவன்’ படத்தில் நடிகராக அறிமுகமானார்
பின்னர் சசிகுமார் நடித்த ‘கொடிவீரன்’ படத்திலும் நடித்தார். ‘ஆடுகளம்’ படத்திற்கு வெற்றிமாறனுடன் சேர்ந்து வசனம் எழுதினார். கதிர், ஓவியா நடித்த ‘மதயானைக் கூட்டம்’ படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார்.
மதயானைக்கூட்டம் படமானது கடந்த 2013ஆம் ஆண்டு வெளியானது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நடக்கும் மொய் விருந்து பற்றியும், உறவுகள் பற்றியும், அதற்குள் எழும் சிக்கல்கள் பற்றியும் படு ராவாக படத்தை உருவாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன். வசூல் ரீதியாக அந்தப் படம் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது. அதேசமயம் ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை பேசுவதாக அந்தப் படத்தின் மீது சிலர் விமர்சனம் வைத்தனர்.
படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் அட்டகாசமாக அமைந்திருக்கும். உதாரணமாக கதிரை கலையரசன் தனது வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டு வரும்போதும்; அப்போது தனது உறவினர்களை ஜாடை மாடையாக பேசும் காட்சி இன்றுவரை பலரது ஃபேவரைட். அந்தக் காட்சியை அவ்வளவும் நேட்டிவிட்டியாக படமாக்கியிருப்பார் விக்ரம் சுகுமாரன்.
பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தன் இரண்டாவது படமான ‘இராவண கோட்டம்’ படத்தை இயக்கினார். இதில் சாந்தனு ஹீரோவாக நடித்திருந்தார். அடுத்து ஏறுதழுவலை மையமாக கொண்ட ‘தேரும் போரும்’ என்ற படத்தை விக்ரம் சுகுமாரன் இயக்கி வந்தார்.
இந்த நிலையில் மாரடைப்பு காரணமாக விக்ரம் சுகுமாரன் காலமானார். மதுரையில் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்லிவிட்டு, இரவு பஸ் ஏறும் போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் அங்கு காலமானார்.