தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், அழகாபுரி தெற்குத் தெருவை சேர்ந்த கணேசன் மனைவி கவிதா. இவர், தனது உறவினர் செல்வராஜ் மனைவி மோகனாதேவி என்பவருடன் ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
பைக்கை மோகனாதேவி ஓட்டி சென்றார்.குரும்பூரை அடுத்த நல்லூர் விலக்கில் சென்றுக் கொண்டிருந்த போது, எதிரே ஆறுமுகனேரி மேல சண்முகபுரத்தைச் சேர்ந்த பாண்டியன் மகன் கார்த்திக் (21) என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதாம். இதில், இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கவிதா, வழியிலேயே இறந்தார். இதுகுறித்து அவரது மகன் மந்திரமூர்த்தி(33) அளித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.