இந்நிலையில், ‘நான் பேசியது தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதில் வருத்தமடைகிறேன்’ என்று கமல் அறிக்கை வெளியிட்டு பணிந்தார்.
தக் லைஃப் படத்தை ரிலீஸ் செய்வது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றத்தை நடிகர் கமல்ஹாசன் நாடிய நிலையில், கமல்ஹாசனைக் கண்டித்து கர்நாடக உயர்நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்வி கேட்டு, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளது.
இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததா? உங்களிடம் ஆதாரம் இருக்கிறதா? என்று நடிகர் கமலுக்கு நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
கமலிடம் சரமாரி கேள்விகளை எழுப்பிய கர்நாடக உயர் நீதிமன்றம், யாராக இருந்தாலும், கமல்ஹாசனாக இருந்தாலும் கூட, நீங்க கமலா இருங்க.. யாரா வேணா இருங்க... மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீங்கள் பெரிய நடிகராக இருந்து கொண்டு அப்படி பேசி இருக்க கூடாது.
இந்த நாட்டின் பிரிவினை மொழிவாரி அடிப்படையில்தான் நடந்தது. ஒரு பொது நபர் இதுபோன்ற அறிக்கையை வெளியிட முடியாது. இதன் காரணமாக அமைதியின்மை, நல்லிணக்கமின்மை ஏற்பட்டுள்ளது. கர்நாடக மக்கள் மன்னிப்பு கேட்க மட்டுமே சொன்னார்கள். இப்போது நீங்கள் மன்னிப்பு கேட்காமல் இங்கு பாதுகாப்பு தேடி வருகிறீர்கள். நீங்கள் என்ன அடிப்படையில் அப்படி பேசினீர்கள், நீங்கள் ஒரு வரலாற்று ஆசிரியரா, மொழியியல் நிபுணரா? என்ன அடிப்படையில் பேசினீர்கள்?
இதேபோன்ற அறிக்கையை ஸ்ரீ ராஜகோபால் வெளியிட்டது பொதுவெளியில் உள்ளது. அப்போதே அதற்காக அவரால் மன்னிப்பு கடிதம் எழுதப்பட்டது, 75 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற பேச்சு உங்களால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அன்று ராஜகோபால் மன்னிப்பு கேட்டார். இப்போது உங்கள் திரைப்படத்தை வெளியிட பாதுகாப்பு தேடுகிறீர்கள். நீங்கள் மன்னிப்பு கேட்டிருந்தால் போதுமானதாக இருந்திருக்கும். மணிரத்னம் படம் என்பதால் படத்தின் முக்கியத்துவம் உங்களுக்குத் தெரியும், ஆனால் நீங்கள் மன்னிப்பு அறிக்கை வெளியிட முடியாது என்று கூறுகிறீர்கள்.
நீங்களே உருவாக்கிய பிரச்சனைக்கு அரசாங்கத்தின் ஆதரவை எப்படி கேட்கிறீர்கள். நீங்கள் பேசிவிட்டு அதற்கு அரசு பாதுகாப்பு தர வேண்டுமா? மொழி என்பது மக்களுடன் இணைந்த ஒரு உணர்வு. நீங்கள் ஒரு சாதாரண மனிதர் அல்ல, நீங்கள் ஒரு பொது நபர். சமூக ஊடகங்களில் எழுதுபவர்கள் கூட விசாரிக்கப்படுகிறார்கள். நீங்கள் பெரிய நபர்.
நீங்கள் பெரிய தவறுதலாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் இப்போது கர்நாடகாவில் படத்தை ஓட்ட வேண்டும் என்கிறீர்கள். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் என்பது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் அளவுக்கு இருக்கக் கூடாது. நீங்கள் மன்னிப்பு கேட்கலாம், மன்னிப்பு கேட்டால் இங்கே வரும் வசூல் மூலம் சம்பாதிக்கலாம். நீங்கள் பேசியதை, திரும்பப் பெறலாம். அந்த பேச்சில் இப்போதும் உறுதியாக நிற்கிறீர்களா? இது தமிழ் மற்றும் கன்னட அறிக்கை சண்டை கிடையாது. நீங்கள் பேசியதால் வந்த பிரச்சனை.
நாக்கு தவறி ஏதேனும் நடக்கலாம். ஆனால் தெரிந்து பேசிய விஷயங்கள் அப்படி இல்லை. நீங்கள் பேசிய வார்த்தையைத் திரும்பப் பெற முடியாது, ஆனால் மன்னிப்பு கேட்கலாம். உடைந்த முட்டையை மீண்டும் சேர்க்க முடியாது என்று நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நடிகர் கமல் தனது பேச்சு தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டது என்று வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.